மன அமைதி வேண்டுமா....

"பெண்களின் கைப் பையில் என்ன இருக்கும்" என்று யாரிடமாவது நீங்கள் கேட்டுப் பாருங்கள். உடனே பதில் வரும் இப்படி:  பௌடர், கண்ணாடி, சீப்பு, பொட்டு, லிப்ஸ்டிக் இத்யாதி இத்தாதி...... ஆனால் என் கைப் பையில் எப்போதும் இருப்பது இரு நூல்கள்.




அப்படி, நான் எப்போதும் என் கைப்பையில் வைத்திருக்கும் புத்தகங்களில்  ஒன்று அன்பு நூல், மற்றொரு அறிவு நூல். அதாவது, திருவாசகம் அன்பு நூல், திருக்குறள் அறிவு நூல். இந்த இரண்டும் ஒரு மனிதனுக்கு மிகமிக அவசியம். இந்த இரு நூல்களை ஆழ்ந்து கற்று உள்வாங்கிக் கொண்டாலே போதுமானது. அவ்வாறு உள்வாங்கிக் கொண்டவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். உலகில் தனக்கு எந்தத் துன்பம் வந்தாலும் அதை இறைவன் செயல் அதுவும் சிவனின் செயல் என்று மௌனமாக ஏற்றுக்கொள்வார்கள். இதைத்தான் சைவ சித்தாந்தமும் போதிக்கிறது. எது நடந்தாலும் அது சிவன் செயல் என்று இரு. அவன் உடனாய் இருந்து எல்லாவற்றையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். நாம் வெறும் கருவிதான். இதுதான் சைவசிந்தாந்த உண்மை. எத்தகைய குழப்பத்தில் இருந்தாலும் இந்த இரு நூல்களில் ஏதாவது ஒன்றை எடுத்துப் புரட்டி, கண்ணில் பட்டதை வாசித்துப் பாருங்கள்.... குழப்பத்திற்கான தீர்வு உடனே கிடைக்கும். கடவுள் அந்த நூல்களின் உள்ளிருந்து நம் குழப்பத்தைத் தெளிவாக்குவான். இது அனுபவ உண்மை.  முயன்று பாருங்கள் உங்களுக்கே புரியும்.

விஷயத்திற்கு வருகிறேன். இந்த இரண்டு நூல்களோடு ஒரு குட்டி நூலும் இருக்கும். அது சுவாமி சிவானந்தரின் மன அமைதி என்ற அற்புதமான நூல். இதை 12.5.2004-இல் ஓர் இசைவாணர் எனக்குப் பரிசளித்தார். அப்போது நான் அவரிடம் வீணை கற்றுக்கொள்வதற்காக (செயின் தாமஸ் மௌண்ட்)  சென்றிருந்தேன்.  ஆன்மீகக் களஞ்சியம் ஆசிரியர் திரு தெள்ளாறு மணி அவர்கள்தான் இவரை எனக்கு அறிமுகம் செய்யு வைத்தார். நான் அவரிடம் வீணை கற்றுக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் வாழ்நாளுக்கும் மறக்க முடியாதபடி அவர் எனக்கு அன்பளிப்பாக வழங்கிய அந்தச் சிறிய பொக்கிஷத்தை என்கூடவே வைத்திருக்கிறேன். காரணம், அதன் பெயர் மன அமைதி. இதைத் தேடித்தானே நாள்தோறும் நாம் அலைந்துகொண்டிருக்கிறோம்.  வீட்டில்,  நண்பர்கள் வட்டத்தில், உறவுகளில், வெளியிடங்களில் என்று எத்தனையே அவமானங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிக்க நேர்கிறது.  அப்போது நம் மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும், எவ்வாறு சமாளிக்க வேண்டும், எவ்வாறு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுத்தவர் சிவானந்தரின் மன அமைதிதான்!


சூளைமேட்டில் வாழ்ந்த காலங்களில் அங்கிருந்த சிவானந்தர் ஆஸ்சிரமத்திற்கு ஓரிரு முறை சென்று வந்த அனுபவம் உண்டு.  அந்த குருநாதர் மீது அப்போது அவ்வளவாக ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. ஆனால் அவரது வாழ்க்கை வரலாற்றைப் படித்து கண்ணீர் மல்கியிருக்கிறேன். ஆனால் இச்சிறு நூலைப் படித்த பிறகுதான்,  வாழ்க்கையில் பெரிய பெரிய பிரச்சனைகள்கூட மிகவும் தூசியாக உணரத்தொடங்கினேன். அதனால் அந்த நூலும் என் கைப்பையில் எப்போதும் இருக்கும். அந்த நூலிலிருந்து சிலவற்றை மட்டும் தருகிறேன்.  அதைப் படித்து நீங்கள் மன அமைதி அடைந்தால் அதன் பெருமை அனைத்தும் சுவாமி சிவானந்தருக்கே!!!!!!!




எல்லோருக்கும் தேவை மன அமைதிதான் - நாம் கோயிலுக்குச் சென்றால், கடவுளிடம் வேண்டுவதும் மன அமைதிதான். எல்லாவற்றிற்கும் காரணமும் இந்த மனம்தான். இதைக் கட்டுப்படுத்தியவன்தான் ஞானியாகிறான்.  சுவாமி சிவானந்தர் கூறுவதைகப் படியுங்கள்....


1.  நீங்கள் அடிக்கடி பிறர் விஷயங்களில் தலையிடுகிறீர்களா... அவர்கள் தவறாகவே இருக்கலாம். ஆனால் அதை முன்னிட்டு நீங்கள் அல்லல் உறுவானேன்!  யாரையும், எதையும் குறை கூறாதீர்கள். பிறர்க்குத் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை கடவுள் உங்களுக்குக் கொடுக்கவில்லை. எல்லோரும் அவரவர் விருப்பப்படியே நடக்கின்றனர். ஏனெனில் அவர்களுக்குள்ளே இயங்கும் கடவுள் அவர்கள் அப்படி செய்யத் தூண்டுகிறார். உங்கள் அமைதியைப் பாதுகாக்க நீங்கள் உங்கள் சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும் என்பது ஒரு நல்ல வழியாகும்.


2.  உங்கள் வேலையில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மன அமைதிக்கு முக்கியத்துவம் தருவோர் கடைப்பிடிக்க வேண்டிய நியதி இது. இந்த உலகத்தில் எதுவுமே உங்கள் கவனத்தை வேண்டுவதில்லை. அனைத்தையும் கவனிக்க ஓர் ஆண்டவன் இருக்கிறார். உண்மையில், உங்களையும் கவனிப்பது அவர்தானே! இந்த உண்மையை மறக்கக்கூடாது.

3.  நான் திருப்பவும் கூறுகிறேன். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். எவரையும், எதையும் குறைகூறாதீர்கள். குறை கூறுதல் என்பது திட்டுவதற்கு நிகர், ஏன்... எது நடந்தாலும், அது கடவுளின் இச்சையால் நடக்கிறது. கடவுளின் அனுக்கிரகம் இன்று எதுவுமே நிகழ்வதில்லை. ஏதாவது நிகழ்ந்தது என்றால் அது உங்கள் பார்வையில் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். அதற்குக் கடவுளின் அனுமதி இருக்கிறது என்றுதான் பொருள். நீங்கள் அதை கண்டனம் செய்தால், கடவுளின் விருப்பத்தை, கடவுளின் பேரறிவை, கடவுளின் தீர்ப்பை நீங்கள் விமர்சிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். அதைச் செய்யாதீர்கள். உங்களுக்கு மன அமைதி கிட்டும்.

4. கடவுள் பொருள்களை முழுமையாக பார்க்கிறார். மனிதன் பொருள்களை பகுதியாகப் பார்க்கிறான். மனிதனோ கடந்த காலம் மற்றும் எதிர்காலத்திலிருந்து பிரிந்து நிகழ்ச்சிகளை நிகழ்காலத்தில் மட்டுமே பார்க்கிறான். அதனால்தான் கடவுள் ஒற்றுமையைக் காண்கிறார். மனிதன் வேற்றுமையைக் காண்கிறான். கடவுள் பூரணமாக நியாயத்தை காணும் அதே தருணத்தில் மனிதனோ அதைக் காண்பதில்லை. நீங்கள் உங்களை கடவுளின் ஸ்தானத்தில் வைத்துப்பாருங்கள். நீங்களே கடவுள் என உணருங்கள். பிரபஞ்சம் முழுவதும் உங்களது படைப்பே என்றும், அனைத்தும் உங்கள் விருப்பத்தாலேயே நிகழ்கின்றன என்றும் உணருங்கள். உடனேயே உங்களுக்குள் அபரிமிதமான அமைதியும் ஆற்றலும் ஊற்றெடுப்பதை நீங்கள் உணர்வீர்கள்.


5. பிறர் உங்களைக் காரணமின்றி திட்டுவதாகவும், காரணமின்றி துன்புறுத்துவதாகவும் நீங்கள் கூறுகின்றீர்கள். அது உண்மையாகவே இருந்தால்கூட, அதற்காக அலட்டிக் கொள்ளாதீர்கள். நிலைமையைப் பொறுமையுடன் சமாளியுங்கள். இக்கட்டான நிலைமையைச் சமாளிப்பதில் அமைதி ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் என்பதை நீங்கள் காண்பீர்கள். யாராவது உங்களைத் திட்டினால், கண்களை மூடிக்கொண்டு பொறுமையாக இருங்கள். பிறர் அவர்கள் விருப்பம்போல் நினைக்கட்டும். அவர்கள் விரும்புவதைச் சொல்லட்டும். இந்த உலகம் முட்டாள்கள் நிறைந்தது. நீங்கள் அறிவுடையவராக விளங்குங்கள். எல்லோர் முன்னிலையிலும் பணிவுடன் இருங்கள். எந்த நிலைமையிலும் அடக்கமாக இருங்கள். நான் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்ற எண்ணத்தை விடுத்து அனைவரிடமும் அனைத்திடத்தும் கடவுளைக் காண கற்றுக்கொண்டால்தான் இது சாத்தியமாகும். கடவுள் அப்படி விரும்புகிறார். எனவே அது அப்படி இருக்கட்டும். இவ்வாறு உங்களுக்குள் சொல்லிக்கொண்டு பிறர் உங்களை நிந்திக்கையில் நீங்கள் மௌனமாக இருங்கள். கலக்கம் அடையாதீர்கள். பழிச்சொற்களை ஏற்றுக்கொண்டால், அடக்கத்திலும் தூய்மையிலும் நீங்கள் வளர்ச்சி அடைவீர்கள். ஆன்மீகத்தில் நீங்கள் உயர்வடைவீர்கள்.

6.  உங்களைத் திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது உங்கள் இயத்தில் எந்தவிதமான பகைமை உணர்ச்சியையும் கொள்ளாதீர்கள். இது வெளிப்படையாகக் கோபத்தைக் காட்டுவதைவிட மிகவும் மோசமானது. இது மானசீகப் புற்றுநோய். பகைமையை வளர்க்காதீர்கள். மறவுங்கள். மன்னியுங்கள். இது ஏதோ ஒரு வெறும் லட்சியவாத பழமொழி அல்ல. உங்கள் அமைதியைப் பாதுகாக்க ஒரே வழி இதுதான்.

7.  உள்ளே பகைமையை வளர்ப்பது என்பது ஒருவனுக்கு மிகுந்த கெடுதியைச் செய்யும். உங்களுக்குத் தூக்கம் போய்விடும். உங்கள் ரத்தத்தை நீங்கள் நஞ்சாக்குகின்றீர்கள். ரத்தக் கொதிப்பும், படபடப்பும், உங்களிடம் அதிகரிக்கும். பழிச்சொல்லோ, அவதூறோ உங்களுக்கு கடந்த காலத்தில் எப்பொழுதோ செய்யப்பட்டது. இப்பொழுது அது நடந்து முடிந்துபோன ஒன்று. அது எப்பொழுதோ முடிந்துபோன விஷயம். சிந்திய பால் அது. அதையே மீண்டும் மீண்டும் நினைத்து அந்த அவதூறு அல்லது பழிச்சொல்லின் துன்பத்தை ஏன் நீங்கள் நீடிக்கிறீர்கள்!..... இது மிகவும் முட்டாள்தனம் இல்லையா! இந்தச் சிறிய விஷயங்களில் நேரத்தையும் வாழ்க்கையையும் வீணடிப்பது என்பது தகாத ஒன்று. ஏனெனில் மனித வாழ்வு மிகவும் சுருங்கியது. இந்தத் தீய வழக்கத்தை விடுங்கள். உங்களுக்கு விருப்பமான வேலை செய்வதே நீங்கள் செய்ய வேண்டிய சிறந்த காரியமாகும். உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன அமைதி கிட்டும். அப்பொழுது ஒன்றைப் பெற்றோம், ஒன்றைச் செய்தோம் என்ற மனத்திருப்தி உங்களுக்குக் கிட்டும். மனிதன் வெறும் உணவால் மட்டும் வாழ முடியாது என்ற பழமொழியை நினைத்துப் பாருங்கள். இதை நினைத்துப் பணத்தைக் காட்டிலும் மன அமைதியே பெரிது என நீங்கள் எண்ணினால் அதிக வருமானத்துடன் கூடிய நீங்கள் விரும்பாத ஒரு காரியத்தைவிட குறைந்த வருமானத்துடன் கூடிய மன அமைதி தரும் ஒரு காரியத்தை நீங்கள் மனமுவந்து ஏற்பீர்கள்.

8. எது நடந்தாலும் அதைப் பொறுத்துக்கொள்ளுங்கள். எதைக் குணப்படுத்த முடியாது அதைப் பொறுத்துத்தேயாக வேண்டும். மகிழ்ச்சியுடன் பொறுத்துக்கொள்ளுங்கள்.  துன்பங்களுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள். பொறுமை, உள்பலம் மற்றும் இச்சாசக்தி உங்களிடம் அதிகரிக்கும். பிரதிகூலமானதை அனுகூலமானதாக நீங்கள் மாற்றி அமைப்பீர்கள்.

9. பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். தப்பி ஓடப்பார்க்காதீர்கள். அப்படிச் செய்தால் உங்களுக்கு மன அமைதி கிட்டாது. அதிகமான கவலைகள்தான் உங்களைச் சேரும். ஏனெனில் உங்கள் கடமைகளை நீங்கள் தட்டிக் கழிக்கப் பார்க்கிறீர்கள் என்ற எண்ணமே உங்கள் மனதை அரித்து ஏற்கெனவே உங்களிடம் இருந்த கொஞ்சம் அமைதியையும் இல்லாததாக்கிவிடும். இதைவிட உங்களால் முடிந்த மட்டும் திறமையுடன் உங்களது பொறுப்புகளை நிறைவேற்றப் பாருங்கள்.

10.  ஒழுங்கான தியான நேரத்தைக் கடைப்பிடியுங்கள். தியானம் மனதை அமைதிப்படுத்துகிறது. மனதில் நிஸ்சலத் தன்மையை அது உருவாக்குகிறது. ஒரு மணி நேரம் நீங்கள் ஆழ்ந்து தியானித்தால்கூட அந்த தியானத்தில் மனதில் ஏற்படுத்தப்பட்ட பதிவு மீதமுள்ள இருபத்து மூன்று மணி நேரமும் மனதில் தங்கி நிற்கிறது. முன்போல மனம் அலைந்து திரியாது. படிப்படியாக தினசரி தியானத்தின்  கால அளவைக் கூட்டுங்கள்.

-----------------

என்ன அன்பர்களே.... சுவாமி சிவானந்தரின் இச்சிறு துளியே போதுமானதாக இருக்கிறாதா.....படித்த  நீங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.... மன அமைதி எல்லாருக்கும் தேவையானது தானே..... இன்னும் பதிவு செய்ய நிறைய இருக்கிறது..... மீண்டும் ஒரு புதிய பதிவுடன் சந்திக்கிறேன்.

-இடைமருதூர் கி.மஞ்சுளா 




Comments

  1. தெரிந்து கொள்ள வேண்டியது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!