தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்




தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும் - சைவத்தில்…

(சைவ நெறி -அன்பு நெறி -  அருள்நெறி)

இடைமருதூர் கி.மஞ்சுளா, எம்.ஏ., எம்ஃபில்,

.

முன்னுரை
       அன்பே கடவுள்  என்பதுதான் சைவத்தின் தலையாய மந்திரம். அன்பு, உயிரிரக்கம், ஜீவகாருண்யம், கருணை இவை அனைத்தும் சைவத்தின் ஒழுக்க நெறிகளாகும்.  சைவ சமயத்தின் தனிப்பெருங் கடவுளான அன்பே வடிவான சிவபெருமானை – ஆண்டவனை வணங்கும் அன்பர்கள், அவ்வன்பை இறைவனிடம் மட்டுமல்லாது, உலகில் உள்ள பிற உயிர்களிடமும் காட்டி, மனிதனாகப் பிறந்தவர்கள் தெய்வ நிலைக்கு உயரமுடியும் என்பதை வலியுறுத்தியது சைவ சமயம். கொல்லாமை, புலால் உண்ணாமையே சைவத்தின் ஒழுக்க நெறிகளுள் தலையாயது.  இந்நெறி வழி சைவத்தின் மாண்பையும், அன்பின் சிறப்பையும், ஜீவகாருண்யத்தின் அவசியத்தையும், தாவர உணவின் மகத்துவத்தையும் மேன்மைகளையும், தாவர உணவு தவிர்த்த புலால் உணவால் ஏற்படும் தீமைகளையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

சமயமும் மதமும்
       சமயம் வேறு, மதம் வேறு. மதம் என்னும் சொல், “கொள்கை என்னும் பொருளில் வழங்கி வருகிறது. மணிமேகலைக் காப்பியத்தில் “சமயம் என்ற சொல் வருகிறது. “மதம் என்ற சொல்லாட்சி அக்காப்பியத்தில் இல்லை. தொல்காப்பியத்தில் மதம், சமயம் ஆகிய இரு சொற்களுமே இடம்பெறவில்லை. “சமயவாதிகள் தத்தம் மதங்களில் அமைவதாக அரற்றி மலைந்தனர் என்று மாணிக்கவாசகர் (திரு.போற்றித் திருவகவல்) இரு சொற்களையுமே கையாண்டுள்ளார். இதிலிருந்து “மதம் என்ற சொல், கொள்கையை மட்டுமே குறிக்கும் பொதுச்சொல் என்பதும், “சமயம்என்ற சொல், கொள்கையை மட்டுமன்றி, அதற்கும் மேலான ஒரு நெறிப்பாட்டைக் காட்டும் சிறப்புடையது என்பதும் பெறப்படுகிறது. எடுத்துக் காட்டாக, “சங்கரர் மதம் என்ற ஒரு வழக்கும் உள்ளது. ஆனால், சைவமதம், வைணவமதம் என்ற சொல் வழக்கு இல்லை. சைவ சமயம், வைணவ சமயம் என்றே வழங்கப்படுகிறது. எனவே சமயம் வேறு, மதம் வேறு என்பது முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.

உயிர்களைக் காப்பதே சமயம்
       உயிர்கள் படிப்படியாக முன்னேறும் இயல்பினை உடையன. இவ்வுண்மையைக் குழந்தைப் பருவம் முதல் முதுமைப் பருவம் வரை நிகழும் பல்வேறு உணர்வுகளையும் அறிவுத் தெளிவையும் வைத்து மெய்ப்படுத்தலாம். நாள்தோறும் உறங்கி எழுந்ததும், புத்துணர்வு பெறுகிறோம். இதிலிருந்து ஒவ்வொரு பிறப்பிலும் உயிர்கள் புதிய புதிய நுகர்வுகளையும் புதிய புதிய அறிவுத் தெளிவையும் பெறுகின்றன என்பது தெளிவாகின்றது. இவ்வுண்ணையைத் தெளிவுபடுத்தித் திருவள்ளுவர், “உறங்குவது போலும் சாக்காடு (339) என்ற குறளில் கூறியுள்ளார். எனவே, மறுபிறப்பு உண்மையை ஒப்புக்கொள்ளும் சமயமே, உயிர்களைக் காத்து உயர்த்துகின்றன என்பது பெறப்படும். அத்தகைய மறுபிறப்புக் கொள்கையை உடையதுதான் சைவ சமயம். இப்பிறப்பில் தம் உடம்பில் உறையும் கடவுளைக் கண்டு உய்திபெறத் தகுதியில்லாதவர்கள் மறுபிறப்பு எடுக்க நேரிடும் என்கிறது.
       சைவசமயத்தின் நெறிப்பாடுகள், பகுத்தறிவுவாதிகளும் ஏற்கும் படியாக உள்ளன. எந்த மதவாதியும் மறுக்கமுடியாத கொள்கைத் தெளிவு உடையதால்தான், சைவ சமயமே சமயம் என்றும் போற்றியுள்ளனர்.

சைவத்தின் தொன்மை:
       வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தொன்மையை உடையது சைவம். கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே சிவவழிபாடு இருந்திருக்கிறது என்பதை புதைபொருள் ஆய்வறிஞர் சர் ஜான் மார்ஷல் குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து சைவ சமயம் எல்லாச் சமயங்களுக்கும் முற்பட்ட தொன்மையினை உடையது என்பது தெளவு.

சைவ சமயம் – நெறி:
       சைவம் என்பது சிவம் என்னும் செந்தமிழ்ச் சொல்லின் அடியாகப் பிறந்தது. சிவனோடு தொடர்பு உடையது சைவம். “சிவ என்னும் சொல்லில் உள்ள சகர ஓசை வடமொழியில் இல்லை. அச்சொல் செம்மை என்பதன் அடியாகத் தோன்றியது. அது செம்மை, வாய்மை,  நன்மை, மங்கலம் என்னும் பொருள்களை உடையது.
       “சமையம் என்ற சொல் “சமயம் என்று மருவிற்று. அச்சொல் “நெறி (SYSTEM)  என்னும் பொருளைத் தருவது. எனவே, “சைவ சமயம் என்பது செம்மை+நெறி= செந்நெறி என்ற பொருளைத் தருவதாகும். “சைவம் பொது நோக்கு உடையது. எல்லா உயிர்களும் சிவ சம்பந்தம் உடையவையே ஆகும். இதனை, “நின்றனவும் சரிப்பனவும் சைவமேயாம் என்பார் சேக்கிழார் பெருமான் (சம்பந்தர் புராணம்,926). அனைத்து உயிர்களையும் மாசு நீக்கிப் பக்குவப்படுத்திச் சிவமாம் தன்மை பெறச்செய்வதே சைவ சமயத்தின் தலையாய நோக்கம் ஆகும்.

சைவத்தின் பெருமை:

உலகம் தழைக்க ஒரு பெரும் பண்பாகிய அன்பைச் சிவம் என்றனர். அத்தகு அன்பு நெறியை – அருள்நெறியை – ஆன்ம நேயத்தையே அருட்பிரகாசர் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டார். உயிர் வாழ்க்கை அன்பின் வழியில் இயங்குவது. அந்த அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு, எலும்பைத் தோல் போர்த்திய உடம்பு என்கிறார் (அன்போ டியைந்த வழக்கென்ப வள்ளுவர்.
       “சைவ சமயம் என்பது இவ்விந்திய நாடு எங்கும் உள்ள தமிழ் நன்மக்களால் எத்தனையோ ஆயிர ஆண்டுகளுக்கு முன்னே தொட்டுக் கைக்கொள்ளப்பட்ட கடவுட் கொள்கையாகும். அஃது அவர்களை அறிவிலும் உருக்கத்திலும் ஒழுக்கத்திலும் மேலேறச் செய்து மற்றைய நாட்டவர்க்கு இல்லாத தனிப்பெருஞ் சிறப்பினை அவர்கட்கே தந்து, மற்றைச் சமயங்களுக்கெல்லாம் மேலான தனி நிலையில் வைகி விளங்குவது என்பார் மறைமலையடிகள் (அறிவுக்கொத்து, பக்.7)
       “தன்னுடைய இருதய கமலத்துள் அருட்பெருஞ் சோதியாய் ஒளிர்ந்து கொண்டிருக்கும் பேரரிவுப் பெரும் பொருளான – ஆதியும் அந்தமும் இல்லா  அரும்பெரும் சுடரைக் கண்டு – தெளிந்து உய்ய வேண்டும். அந்த அறிவாகிய ஜோதியே – ஜீவனே சிவம். நாள்தோறும் அந்தச் சிவத்தைச் சார்ந்து – அதுவாகத் தான் ஆவதற்கு மேற்கொள்ளும் வாழ்க்கை நெறியே சைவ நெறி என்பார் அரங்க. இராலிங்கம் (நினைக்கத் தனக்கு,  பக்.101)
       “பொய்யாகிய இந்த உடம்பில் மெய்யாக இருக்கும் உயிராகிய சிவத்தை மெய்க் குருபிரான் காட்டிக் கொடுக்கக் கண்டுணர்ந்தோரே சைவர். அவ்வாறு அறிந்த பிறகு நாளும் அந்தச் சிவத்தோடு நினைவில் ஒட்டிப் பழகிப் பழகி தானே அதுவாக – சீவனே சிவமாக மாறுவதற்குரிய வாழ்க்கை நெறியில் வாழ்வார் என்பதற்கு அடையாளம் அவர் வாழும்போதே தன்னுள் இருக்கும் சிவத்தைக் கண்டு – தெளிந்து – உணர்ந்து, நாளும் அதனுடன் ஒட்டி வாழ்ந்து உறவாகிப் பழகி வருதலேயாம். அதுவே சிவ சம்பந்தம். எனவே சிவலோகத்தை உயிருடம்பினுள்ளே தரிசனையாகப் பெறவேண்டும் (அர.பக்70)
சைவ சமயம் எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டு தாயகமாக விளங்குகின்ற நிலையையும், எந்தச் சமயத்தையும் புறக்கணிக்காது தழுவி நிற்கும் சமரசம் உடையதாக உள்ள நிலையையும்,
“சத்திசிவ மிரண்டாய்த் தான்முடிவி லொன்றாகிச்
சித்திரமாய் நின்றதிற மறியேன் (பட்டினத்தார், பூரணமாலை – 59)

என்று பட்டினத்தடிகள் சுருங்கக்கூற, அதனையே,

“சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம்பொருளை
கைவந் திடவே மன்றுள்வெளி காட்டும் இந்தக் கருத்தைவிட்டுப்
பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுத வேண்டாம் முத்திதரு
தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாருஞ் சகத்தீரே
(காடும் கரையும்-2)

என்று தாயுமானவர் விரிவாகப் பாடியுள்ளார்.

       “சைவத்தின் மேற்சமயம் வேறில்லை அதில்சார் சிவமாம்
       தெய்வத்தின் மேற்தெய்வம் இல்லெனும்
நான்மறை செம்பொருள் வாய்மை வைத்த – சீர்திரு
தேவாரமும் திருவாசகமும் உய்வைத் தரச் செய்த
நால்வர் பொற்றாள் எம் உயிர் துணையே

என்பது சைவ எல்லப்ப நாவலருடைய அருள்மொழி.

பக்திக்கு வித்து  அன்பே!
அன்பாகிய திருமேனி கொண்டவன் இன்பமாகிய சிவன். அவன் கருணை வடிவினன். அக்கருணையே அன்பாகிய சிவனாகும் எனத் தெளிவு பிறக்கிறது. அன்பே சிவம் என்னும் உண்மையை அருளால்தான் அறியமுடியும். அவனது திருவடிக்கண் வைக்கும் அன்பே, அன்பாகிய வித்தே, சிவமாய் விளைந்து இன்பமாய்க் கனியும். இவ்வாறு அன்புதான் சிவமாகும் என்பதை அறிந்தவர்கள் பின்னர் அன்புருவாகவும், சிவவுருவாகவும் அமர்ந்திருப்பார்கள் என்கிறார் திருமூலர்.
ஆன்மிக நெறியில் முன்னேற்றம் காண்பதற்கு, பக்தி நெறி முதற்படியாத அமைகிறது. சிவனை வழிபடுகிறவர்கள் “சைவர் என்றும், அச்சிவனை வழிபடும் நெறிக்குச் “சைவநெறி என்றும் உலகத்தார் பொருள் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
சைவம் சிவத்துடன் சம்பந்தம் ஆவது என்கிறார் திருமூலர்.




சைவம் சிவத்துடன் சம்பந்தம் ஆவது
சைவம் தனையறிந் தேசிவம் சாருதல்
சைவம் சிவமன்றிச் சாராமல் நீவுதல்
சைவம் சிவானந்தம் சாயுச்சிய மாமே (1512)

என்பதற்கேற்ப சிவத்தைச் சார்ந்து வாழ்ந்தலே சைவ நெறியாகும். சிவ பரம்பொருளாகிய அந்தச் செம்பொருளைத் தன்னுள்ளே கண்ணாரக் கண்டவர்கள் சித்தர்கள். அவர்கள் தாமே சிவமாகி மலம் மூன்றையும் வென்றவர்கள். அவர்களே சிவலோகத்தை இங்கே தரிச்சித்தவர்கள். தம் ஊன் உடம்பிற்குள் இருக்கும் மூன்று வெளிகளைக் கடந்து சிவபரம்பொருள் இருக்கும் நான்காவது வெளியில் ஒளியாகக் கலந்தவர்கள். அவர்களே சிவசித்தர். இவ்வுண்மைகளை மிகத் தெளிவாக, திருமூலர் ஐந்து பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். சிவபரம்பொருள் வெளியில் இல்லை. நம் ஊன் உடம்பிற்குள்ளேதான் இருக்கிறது என்ற உண்மையை  2526, 2969, 124, 123, 125 ஆகிய ஐந்து பாடல்கள் வழி விளக்கியுள்ளார். (அரங்க.இராமலிங்கம், திருவடி, கட்: சைவநெறி, பக்.61.63)
உடம்பில் உறையும் உத்தமன் (நடமாடக் கோயில்)
       உடம்பினைப் பெற்ற பயனாவது எல்லாம்
          உடம்பினுள் உத்தமனைக் காண்
 என்று ஔவையார் பாடியுள்ளார். மெய்ப்பொருளை அறிய மனம் செம்மையாக வேண்டும். அலைவு அற்று இரு மனமே என்றும் (1) என்றும், சலியாது இரு மனமே(2) என்றும் மாணிக்கவாசகர் அருளிச்செய்துள்ளார்(திருஞானத் தாழிசை நூல்: நினைக்கத் தனக்கு, அரங்க.இராமலிங்கம், பக். 31) மனம் செம்மையானால்தான் மெய்ப்பொருளைக் காணமுடியும். மெய்ப்பொருளைக் கண்டவர் எதைப் பெறுவர்.. இதோ மாணிக்கவாசகர் கூறுகிறார்:  “கருவாசலில் அணுகாமலே பிறவா நெறிபெறுவார் என்று கூறி, உடம்பினுள்ளே ஒளிரும் பிரம்ம பிரகாசமாகிய சுழிமுனையைக் கண்டுவிட்டால் இனிப் பிறவியில்லை எனத் திட்டவட்டமாக மாணிக்கவாசகர் அருளியுள்ளார். “மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம் என்று திருமூலரும் கூறியுள்ளார்.
திருமூலர் கூறிய உடம்பே ஆலயம்
அண்டத்தையும் (புறநிலை) பிண்டத்தையும் (அகநிலை) ஒரே பரம்பொருள்தான் ஆட்சி செய்கிறது என்று கண்டுரைத்தவர் தமிழ்ச் சித்தர். ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதியாக ஒளிரும் இறைவனைப் புறத்தில் சென்று காண இயலாது. எனவே, எல்லையற்ற பரம்பொருளை மனித உடம்பிற்குள் கண்டு களித்தனர்.  பிற உயிர்களிலும் அதன் அருட்செயலைக் கண்டு தெளிந்தனர். உடம்பெனும் ஆலயத்தில் உள்ளமெனும் கருவறையுள் அருட்பெருஞ்சோதி ஆண்டவரைக் கண்டு அருள் பெற்றனர். இப்பேருண்மைகளைத் திருமந்திரப் பாடல்களில் (724, 725, 1823) காணலாம்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திரம்பட மெய்ஞ்ஞானம் சேரவுமாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே (724)

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருளைக் கண்டேன்.
உடம்புளே உத்தமன் கோயில் கொண் டானென்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே (725)

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே. (1825)

 நம் உடலுக்குள் இருக்கும் சிவத்துடன் உயிருடன் இருக்கும் போதே சம்பந்தம் கொண்டு சிவத்தை அறிந்து சிவமாக வேண்டும். அதற்குரிய வாழ்க்கை நெறியே சைவநெறியாகும். உயிருடன் இருக்கும் போதே சிவமானதாக மணிவாசகப்பெருந்தை இவ்வாறு கூறுகிறார்.
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும் வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனை யாண்ட
அத்தனெனக் கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே.
(திரு.அச்.பதி.1) இதை பாரதியாரும் (செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்) (வேதாந்தப் பாடல்கள்: சங்கு) உணர்த்தியுள்ளார். சீவன் சிவனாக மாறுவதற்குரிய வாழ்க்கை நெறியில் ஒழுகுதலே சைவநெறி ஆகும்.  அதுவே சிவசம்பந்தம். அத்தகைய சிவநெறிக்கென்று சில அறங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
திருமூலர் வலியுறுத்தும் கொல்லாமை, புலால் உண்ணாமை:
அறத்திணை என்பது ஒழுக்கம், வழக்கம், நீதி, கடமை, புண்ணியம் முதலிய எட்டாக வழங்குவர். திருமூலர் திருமந்திரத்தில் அறக்கருத்துளான அன்புடைமை, நிலையாமை, பிறனில் விழையாமை, கொல்லாமை, புலால் உண்ணாமை முதலியவற்றைக் கூறியுள்ளார். திருமூலர் முதல் தந்திரத்திலேயே அன்புடைமை பற்றி பேசுகிறார். ஒருவன் செய்யத்தக்கது நல்வினையே என்கிறார்.
“வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழி அடைக்குங் கல்
 இத்தகைய அறத்தைச் செய்தால் அவ்வறம் பிறப்பை நீக்கி வீடுபேற்றைக் கொடுக்கும் என்கிறார் வள்ளுவர்.
கொல்லாமை:  கொல்லாமை பற்றிச் சொல்லாத நீதி நூல்களே இல்லை. திருமந்திரத்தில், சிவபூஜைக்குச் சிறந்த மலர் கொல்லாமை -  இறைவன் கொல்லாமையை விரும்பி ஏற்கின்ற பூஜை மலராகக் கொள்வதை,
“மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர்
நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும் (197)
உற்றாரும் ஆவி அமர்ந்திடுமே உச்சியை (239) என்னும் பாடலுள்  ஒண் மலர் எனக் குறிப்பிடுவன, கொல்லாமை, பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு ஆகியனவாகும்.
புலால் மறுத்தல்: புலாலை விரும்பி உண்ணும் மக்கட் பிறப்பினை இழிவாம் கொடு விலங்கினும் இழிவாகப் பேசுவார். அப்புலால் உண்பவர்களுக்கு இம்மையில் பொல்லாப்பு வந்து சேரும். அப்புலையர்களை எமன் தூதர்கள் பெரும் துன்பம் தரும் கொடிய நகரத்தில் தள்ளுவர் (198, 199) என்கிறார் திருமூலர்.
சிவபெருமானால் விதிக்கப்பட்ட 16 வகை அறங்களுள் எல்லோரிடத்திலும் அன்புடன் இருத்தல், கருணை உணர்வோடு இருத்தல், அருளுடைமை,  சாத்வீக குணத்தைக் கடைப்பிடித்தல், தீய வழிகளில் பொறி புலன்களை செலுத்தாதிருத்தல் என்பவை முதன்மையான அறங்களாகும். இந்தப் பதினாறு அறங்களையும் பின்பற்றி வாழ்பவர் பெறற்கரிய பேறுபெறுவர் என்கிற உண்மையை, அருணந்தி சிவம் அருளிச்செய்துள்ள சித்தாந்த நூலான சிவஞான சித்தியார் (சுபக்கம், 113) விரிவாக விளக்குகிறது.
சைவநெறியின் கொள்கை: 

அன்பு, அருள், இரக்கம், கருணை ஆகிய இந்நான்கே சைவநெறியின் தலையாய - மிக முக்கியமான கொள்கையாகும். புலால் உண்ணாதவர் சைவர், அதை உண்பவர் அசைவர் என்ற கொள்கை உலகியலில் நிலவி வருகிறது. எந்த ஒரு உயிர்களுக்கும் துன்பம் தராதவன்தான் உண்மையான சைவன். அவன் அன்பு, இரக்கம், கருணை, அருள் உடையவனாய் இருப்பான். இத்தகைய உயர் பண்புகள் இல்லாதவன் அசைவன். அனைத்துயிர்களையும் தன்னுயிர்போல் எண்ணி அவற்றைப் பாதுகாக்க நினைப்பவன் சைவன். பிற உயிர்களுக்குத் தீங்கு செய்து தான் இன்பம் அனுபவிக்க – தன் உடம்பை வளர்க்க நினைப்பவன் அசைவன் என்று கூறலாம்.

கல்வியின் பயன் – அறிவு,  அறிவின் பயன் – ஒழுக்கம், ஒழுக்கத்தின் பயன் – அன்பு, 
அன்பின் பயன் – அருள், அருளின் பயன் – துறவு. அதனால்தான் வள்ளுவர் புலால்

 உண்மையையும், கொல்லாமையையும் துறவறவியலில் அடக்கினார். மனிதனின் முடிந்த முடிவாக – உயர்கதியை அடையவைப்பது துறவு நிலைதான்.


வள்ளலாரின் அன்பு நெறி:
       “அனைத்துச் சமயங்களும் போதிக்கும் அடிப்படை உண்மை அன்பு. இந்த அன்பினை, மனிதன் மனிதனிடம் காட்டும் அன்பு, பிற உயிர்களிடத்தில் காட்டும் அன்பு என்ற இரண்டு நிலைகளில் குறிப்பர். அவை மனிதனை மனிதனாக வாழ வைக்கும் மூலதனங்கள். இத்தகைய மூலதனங்களைப் பெறுவதற்கு நான்கு ஒழுக்கங்களைக் கற்றுத் தருகிறார் வள்ளலார். அவற்றில் மக்கள்  அனைவரையும் தன்னைப் போல் பாவித்தல் – ஜீவ ஒழுக்கம், எல்லா உயிர்களையும் தன்னைப் போல் பாவித்து ஒழுகுதல் – ஆன்ம ஒழுக்கம் ஆகிய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கும் போது அன்பு நெறியானது நம்முள் உறையும். இதனை வள்ளலார்,
       “அப்பா நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
       ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்

என்றார். ஒரு மனிதன், மனிதன் என்ற உணர்வை முழுமையாகப் பெறும்போது அவனிடம் அருள் பிறக்கிறது. அத்தகைய அன்பும், அருளும் இறைவன் என்கிறார் வள்ளலார். இதை,
      
“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே

என்ற பாடல் மூலம் வணங்குகிறார். இறைவனை அன்பாகவும், அறிவாகவும் உணரும் போது மனிதன் மனத்தில் அன்பு இருக்குமெனில் இறைவன் அகப்படுவான். மேலும்,

       “அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
       அருள்நோக்கில் தீர்த்தநீர் ஆட்டிக்கொண்டாய்
       எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய் (396)

என்று இதனை மேலும் மெருகேற்றி மொழிகிறார். “அன்பெனும் அணுவுள் அமைந்தபேர் ஒளியே, அன்புருவாம் பரசிவமே (3269) என்கிறார்.

திருமூலரின் அன்புநெறி
      
       அன்புருவான சிவனை அடைதற்குரிய மார்க்கமும் அன்பே என்றும், அன்பினால் அகம் குழைந்தாலன்றி இறைவனை அடைய இயலாது என்றும் திருமூலர்
(திருமந்திரம் 272,) ஆகும்.  கூறியுள்ளார். மேலும் அருளுடைமையால் ஞானம் கைகூடும் என்கிறார்.ொ1
      
நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே
புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன் (5:90:9)

என்பார் திருநாவுக்கரசர். “பக்தி வலையில் படுவோன் காண்க (திருவண்டப்பகுதி வரி42) என்றும், “பக்தி செய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன் (கீ.திரு.வரி119 )என்றும் மாணிக்கவாசகர் கூறியுள்ளார்.
      
திருமந்திரம் இறைவனை அன்பின் வடிவமாகவே ஏற்றுப் போற்றுகிறது. “அன்பே சிவம்(257) என்றும், “அன்பின் உள்ளாகி அமரும் அரும்பொருள் அன்பின் உள்ளார்க்கே அணைதுணையாமே (266) என்றும் கூறுகிறது. நாவுக்கரசர் தேவாரத்திலும் இத்தகைய அன்பின் பெருக்கத்தைக் காணமுடியும்.  சேக்கிழார், தொண்டர்களின் தனிப் பெருமைக்கு இறையன்பே அடிப்படை (பத்தராய் பணிவார்-7) என்பார். 
       “ஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண் ஆரேனும் காணா அரன் என்று உய்யவந்த தேவநாயனார் திருக்களிற்றுப்படியார் என்ற சைவ சித்தாந்த நூலில் குறிப்பிடுகிறார்.
முன்னோர் வழிநின்று பாம்பன் சுவாமிகளும் பக்தியே முக்திக்கு வழி. ஞானம் இல்லாவிட்டால் முக்தி கிட்டாது. ஞானமும் யோகமும் இல்லையென்றால் அது தோன்றாது.  அந்த யோகமும் உண்மையான பக்தி இல்லாமல் உண்டாகாது. உண்மையான பக்தியும் இறைவன் கருணையில்லாமல் தோன்றாது என்றும்,  அழிவற்ற கடவுள் அன்பெனும் பிடியுள் அகப்பட்டுவிடும் என்றும் கூறுகிறார் (திருவலங்கல் திரட்டு 2,47)
அருளுடைமை
      
“மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
       தன்னுயிர் அஞ்சும் வினை (குறள்-244)

என்றார் வள்ளுவர். தன்னுயிர் போல் மன்னுயிரையும் போற்றி எல்லா உயிர்களிடத்தும் அருள் செய்வார்க்குத் தன் உயிர் அஞ்சவரும் தீயவினைகள் உண்டாகாது என்கிறார். இக்கருத்தையே வள்ளலாரும் மொழிந்துள்ளார்.
       வள்ளுவர், அன்பு என்ற பண்பு இருந்தால்தான் அறம் என்னும் பயன் விளையும் என்கிறார். அன்பு காரணம் – அறம் காரியம். மேலும் அன்புடைமை அதிகாரத்தில் “அறத்திற்கு அன்புசார்பென்பது” (76) என்று கூறியிருப்பதை மனத்தில் நிறுத்த வேண்டும்.
அறத்திற்கே சார்பாக இருப்பது அன்பேயாகும். “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே” என்றார் வள்ளலார். உலக உயிர்களின் வாழ்க்கைக்கு அன்பே அடிப்படை. அன்பற்றவர்கள் உயிரற்ற சடமாவர். அன்பே வாழ்வில் உயர் நிலையும் உயிர்நிலையுமாகும். அன்பின் சிறப்பைப் பற்றி அருளாளர்கள் பலரும் வியந்து பாடியுள்ளனர்
அன்பு, பரிவு, இரக்கம், அருள் என்பன அன்பின் பல்வேறு நிலைகள் ஆகும். அருள் என்பது இயல்பாகவே எல்லா உயிர்களிலும் செல்வதாகிய கருணையைக் குறிக்கும். அதுவே இறைவனின் குணமாகும். ஆகவே, இறைத் தன்மைக்குத் தன்னைத் குதியுடையவனாக்க முயற்சி செய்பவனுக்கு, எல்லா குணங்களிலும் மேம்பட்டதாகிய இரக்க குணம் இன்றியமையாதது என்பதைப் புலப்படுத்தும் பொருட்டே திருவள்ளுவர் “அ்ருளுடைமை என்னும் பண்பையே சிறப்பாகப் பேசுகிறார்.
       மரண காலத்தில் தன்னுயிரை வருந்திப் பாதுகாப்பதுபோலவே பிறவுயிர்களையும் வருந்திப் பாதுகாப்பவன் எவனோ, அவனே உயிர்களுக்கெல்லாம் நன்மை செய்பவனாகி, எந்நாளும் இன்பமே வடிவாக இருப்பான். கருணையுள்ளம் உடையோன் எவ்வுயிர்க்கும் தீங்கு நினைக்க மாட்டான். தன் உடலை வளர்ப்பதற்குத் தான் வேறோர் உயிரின் உடம்பைத் தின்பவன் அருளுடையவனாக எப்படி இருக்க முடியும் ? ஓர் உயிர்க்கும் தீங்கு நினையாதவர்களே அருளாளர்கள்.

சீவகாருண்யம்:
      
       அனைத்து உயிர்களிடமும் கருணை காட்டுவதே ஜீவகாருண்ய ஒழுக்கம். ஆன்ம நேய ஒருமைப்பாடு. ஒவ்வொரு மனிதனும் தன் அறிவின் பயனாக அன்பைக் காட்டவேண்டும். அன்பின் பயனாக அருள் இரக்கம் காட்ட வேண்டும் – இதுவே ஜீவகாருண்யத் தத்துவம்.
“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஔவையார். கிடைத்தற்கரிய பிறவி இம்மானுடப் பிறவி. இம்மனிதப் பிறவியை தெய்வப் பிறவியாக்க வேண்டும். அப்படி தெய்யப்பிறவியாக்க வேண்டுமென்ரால் உயிர் இரக்கம் – ஜீவகாருண்யம் வேண்டும்.
காருண்யம் என்னும் உயர்ந்த குணமானது இது நல்லது, இது தீயது என்று பகுத்துக்காணும் உணர்ச்சி வாய்ந்த மக்களிடத்தும் மட்டும் காணப்படுகின்றதேயல்லாமல், மக்கள் அல்லாத மற்ற ஐந்து வகைப்பட்ட உயிர்களிடத்தும் காணப்படவில்லை. இவ்வைந்து வகை உயிரினங்களிற் சில பசியெடுத்த காலங்களில் எல்லாம் தம்மினும் கீழ்ப்பட்ட உயிர்களைச் சிறிதும் இரக்கமின்றிக் கொன்று அவற்றின் உடம்பைச் சிதைத்துத் தின்னுகின்றன. ஆதலால், இரக்க குணம் மக்கள் அல்லாத மற்றைய உயிர்களிடத்தில் இல்லை என்பது விளங்கும்.

கொல்லா விரதம்
      
       “கொல்லாமை என்பது பண்டைய தமிழ் இலக்கியங்களில் அறமாகக் கருதப்பட்டிருக்கிறது. “கொலை என்பது உயிரை உடம்பினின்றும் பிரிப்பது. உயிருக்கு உடல் ஆண்டவனால் கொடுக்கப்படுவது. உயிர் உடலுடன் வாழ்ந்து மெய்யுணர்வு துய்த்தற்கு உரியது. இது கப்பலிலிருந்து கரை சேர்வது போன்றது. கப்பலை நடுக்கடலில் உடைத்துவிட்டால் எவ்வளவு பாவமோ, அவ்வளவு பாவமே உயிரை உடலிலிருந்து பிரித்து விடுவது. “பஞ்சமா பாசகங்களுள் கொலையே மிக்கக் கொடுமையானது. கொலைப் பாவியை நிலவுலகம் பொறாது. எரிந்து கொண்டிருக்கும் கொடிய நரகம் அவனை எடுத்து விழுங்கும் என்கிறது நீதி நூல் (அதி.17,செய்.10)
       கொலை பாவமானது ஒருவன் செய்த புண்ணியங்களை நசிக்கும் பெரு நெருப்பாகும். எரிவாய் நரகிடைப் பொருந்தும் துன்பமும் அதுவாகும். ஊன் உண்டற்கு என்று பிராணிகளை வதைக்கும் புலையனும், புலையென்னும் பெயருடைய ஊனை உண்பவனும் எத்துணைப் புத்திமான்களாக இருப்பினும் முன்னர் கூறியவாறு நரகங்களில் குடிபுகுவர் என்று பாம்பன் சுவாமிகள் கூறியுள்ளார். (தகராலய ரகசியம், இரண்டாம் காண்டம், செய்.33)
       கொலை செய்தவன் இம்மையிலேயே துன்பம் அனுபவிப்பான் என்பதை சுந்தரர்  (7:35-5) கூறியுள்ளார்.  வேள்ளியின் பொருட்டுப் பிராணிகளைப் பலியிடுவதும் ஊன் உண்பதற்காகப் பிராணிகளைக் கொல்வதும் பாவமே ஆகும்.
       “இப்பிறப்பில் கை கால்களில் விரல்கள் அழுகி, ஒன்றுமில்லாமல் அலையும் தொழுநோயாளிகள், முற்பிறப்பில் நண்டுகளைப் பிடித்து அவற்றின் கால்களை ஒடித்துக் கொன்று புசித்தவர்கள் என்று நாலடியார் (123) கூறுகிறது.
       கொலையினால் உண்டாகும் கேட்டினை உணர்வோர் கொல்லாமை எனும் பண்பு கொண்டு மேம்பட வேண்டும். வள்ளுவர் கொல்லாமை பற்றி தனி அதிகாரமே வகுத்துள்ளார். “எல்லா அறங்களையும் தன்னுள் அடக்கிய உயர்ந்த செயல் யாது என்று கேட்டால், அஃது எந்த ஓர் உயிரையும் கொல்லாதிருப்பதே ஆகும் (321) என்றும், தன்னுடைய உயிருக்கே ஆபத்து என்று தெரிந்தாலும் அதைத் தடுப்பதற்காகப் பிற உயிர்களைக் கொல்லும் கொடிய செயலைச் செய்யக்கூடாது (327) என்றும் வள்ளுவர் கூறியுள்ளார்.



       “கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க
       எல்லோருக்கும் சொல்வது என் இச்சை பராபரமே
கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லோர் மற்று
       அல்லாதோர் யாரேல் அறியேன் பராபரமே (191)

என்கிறார் தாயுமானவர் சுவாமி.
 “வயங்கு அருளுள்ளார்,  இயங்கு உயிர் கொல்லார் என்பது ஞானவாக்கியம்(27).

       தத்துவரீதியாகப் பார்க்கும்போது பௌத்தர்கள் கொல்லாமையை வலியுறுத்தினாலும், புலால் உண்ணாமையை வலியுறுத்தவில்லை. “கல்பய மாமிசம், “அகழுதூபு மாமிசம் என்று புலாலை ஏற்றுக்கொள்ளக்கூடிய, ஏற்றுக்கொள்ள இயலாத என இரு வகைப்படுத்தினர். “பிறர் கொன்று தரும் புலாலை, இறந்த விலங்குகளின் புலாலை ஏற்பது தவறன்று என்பது அவர்கள் கொள்கை. ஆனால், கொல்லாமைக் கோட்பாட்டை முழுமையாக வலியுறுத்திய நூல்கள் பெரும்பாலும் சமண இலக்கியங்கள்தான்.  இந்தக் கோட்பாட்டை வாழ்க்கையில் தவறாது பின்பற்ற வேண்டும் என்று பேசிய சமய இலக்கியங்களும் தமிழில் உள்ளன. வள்ளாரும் வள்ளுவரும் இதனை மிகுதியாக வலியுறுத்தியுள்ளனர். ஆகவே, கொல்லாமை கோட்பாட்டை நாம் தமிழ் இலக்கியங்களில் சமய எல்லைகளைக் கடந்தும் காணமுடிகிறது.
இவ்விரக்க குணமென்பது எந்த உயிர்களிடத்து இல்லையோ அந்த உயிர்கள் எல்லாம் கொடிய வன்னெஞ்சமும் கொலைத் தொழிலும் உடையனவாய் இருக்கின்றன.
       எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் உடையவரான ஆண்டவனது பேரின்பத்தை நாம் நுகர வேண்டுமாயின் அவர்போல் அளவிறந்த இரக்க குணமாகிய தெய்வத் தன்மையை அடைதல் வேண்டும். எவர்கள் மென்மையான இனிய இரக்க குணம் உடையராகின்றார்களோ அவர்களுக்கே எல்லாம் வல்ல கடவுள் அருள் புரிவான். இதை,
      
“கல்லால் எறிந்துங் கைவில்லால் அடித்துங் கனிமதுரச்
       சொல்லாற் றுதித்தும்நற் பச்சிலை தூவியுந் தொண்டரினம்
எல்லாம் பிழைத்தன அன்பற்ற நான்இனி ஏதுசெய்வேன்
       கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கட் குருமணியே

என்று அருட்பெருஞ் செல்வரான தாயுமான அடிகள் கூறியவற்றாலும் வள்ளலார்,

       “வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள்
              மனங்கலந்து மதிகலந்து வயங்காநின்ற
       என்புகலந் தூன்கலந்து புலன்களோடும்
              இந்திரிய மவைகலந்துள் இயங்குகின்ற
       அன்புகலந் தறிவுகலந் துயிரைப் பூதம்
              ஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி
       இன்புகலந் தருள்கலந் துளும்பிப் பொங்கி
              எழுங்கருணைப் பெருக்காறே இன்பத்தேவே

என்னும் அருட்பாவினாற் கொலைக் குணில்லாதவர்களின் உடம்பு உயிரெல்லாம் இறைவன் வந்து கலந்து நின்று பொலிவான் என்று கூறியவாற்றானும் நன்கு விளங்கும்.
       இன்னும் பேரிரக்க குணமான கொல்லாமை உடையவர்களுக்கு எல்லா நற்குணங்களுந் தாமே வந்து பொருந்துமெனவும், அவ்விரக்கக் குணம் இல்லாதவர்களுக்கு எல்லாத் தீய குணங்களும் மேன்மேற் கிளைத்தெழுந்து அவர்களைத் தனி விலங்குகளாக்கி விடுமெனவும் இனிது விளக்கும் பொருட்டே தம் தாயுமான அடிகள்,







       கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்கும் என்றும்,
       “கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லோர்மற்
       றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே

என்றும் அருளிச் செய்தனர்
       இவ்வாறு இரக்கமற்ற கொடிய கொலைத் தொழிலையும் அதனால் வரும் புலால் உண்ணுதலையும் நாம் பழகி வருவோமாயின் இரக்கமற்ற கொடிய விலங்குகளாகிய புலி, கரடி, சிங்கம் முதலிய விலங்குகளின் இயல்பை நாம் அடைவதோடு, நம்மைச் சேர்ந்தவர்களையும் அக்கொடிய தன்மையை அடையும்படி செய்துவிடுவோம். ஒரு குடும்பத்தில் ஒருவர் புலால் தின்று பழகுவாராயின் அவரோடு சேர்ந்த அக்குடும்பத்தாரும் நண்பர்களும் அவரைப் போல் புலால் தின்று கெட்டுப் போவர்.
அன்புருவாயும் அருளுருவாயும் இரக்கவுருவாயும் விளங்குன்ற நம் ஆண்டவன் தன்போல் அன்பும் அருளும் இரக்கமும் நிரம்பியிருக்கின்ற உயிர்களிடத்து மட்டுமே குடிகொண்டு தோன்றுவான். இரக்கமில்லாமற் பல உயிர்களையும் கொன்று தின்று வாழும் மக்களிடத்து அன்பு வைத்து அருள்புரியான் என்பதும் வெளிப்படையாகும்.
       இத்தனை இரக்கமுள்ள எல்லாம் வல்ல கடவுளாகிய முதற்பெருந் தந்தைக்கு அருமைப் புதல்வர்களாம் உரிமைவாய்ந்த எல்லா உயிர்களும் தம்முள் அன்பும் இரக்கமும் பூண்டு நடத்தல் இன்றியமையாத கடமையாகும். இதனை நினையாமல் மக்களான நாம் நம்மினுந் தாழ்ந்த உயிர்களைக் கொலை செய்து அவற்றின் ஊனைத் தின்றால் அதனைக் கண்டு நம் அப்பன் சினங்கொண்டு நம்மைக் கொடுந்துன்பத்திற்கு உள்ளாக்குவானென்பது திண்ணம். இது குறித்தே,

       “கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
       வல்லிடி காரர் வரிகயிற்றாற் கட்டிச்
       செல்லிடு நீரென்று தீவாய் நரகிடை
       நில்லிடு மென்று நிறுத்தவர் தாமே என்றும்,

       “பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
       எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
       செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தின்
       மல்லாக்கத் தள்லி மறித்துவைப் பாரே

என்றும் திருமூலர் திருவாய் மலர்ந்தருளினார். நாம் இப்பிறப்பில் புலால் தின்றால், மறுப்பிறப்பில் தானே ஏதோ கடவுள் தண்டிக்கப் போகிறார் என்று எண்ணிவிடாதீர்கள்! புலால் உண்பதால் இந்தப் பிறவியிலேயே கோமாரி, அம்மை, கக்கற், கழிச்சல், வயிற்றுவலி முதலிய நோய்களையும், வறுமை, மனக்கவலை, சண்டை, கிறுக்குப் பிடித்தல் முதலான பொல்லாங்குகளையும் ஏவி நம்மை நம் ஆண்டவன் துன்பப்படுத்தி ஒறுப்பான் என்பதற்கு சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த பதிகமே சான்று.

       “குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள் சூழ்ந்த களவெலாம்
       செற்றொருவரைச் செய்த தீமைகள் இம்மையேவருந் திண்ணமே,
       மற்றொருவரைப் பற்றி லேன்மற வாதொழி மட நெஞ்சமே
       புற்றரவுடைப் பெற்றமேறி புறம்பயந்தொழப் பேதுமே

இன்னும் கொல்லாதவர்களைக் கொல்லச் சொல்லியும், புலால் தின்னாதவர்களைத் தின்னச் சொல்லியும் கட்டாயப்படுத்தியவர்களெல்லாரும் நிரயத்திற் சேர்வார்களென்று காசி காண்டம் கூறுகின்றது.  (மறைமலை, பக்.33)
      
இலக்கியங்களில் கொல்லாமை
யசோதர காவியத்தில் கோழியைக் கொல்வது பாவம் என்று எடுத்துக்கூறப்பட்டுள்ளது. யசோதரன் அல்லல்(பாவம்) தீர கோழியைப் பலியிட முற்படும்போது, சிந்தனையில் இம்சை எண்ணம் இருப்பதே பாவம் என்று  தாய் யசோதமதி அறிவுரை கூறுவதை ஒரு பாடல் (இன்னுமீது ஐய கேட்க) விளக்குகிறது.
தன்னுடைய வழிப் பயணத்தில் புலால் உண்ணைமையையும் கொல்லாமையும் போதித் சீவகனை சிந்தாமணியில் திருத்தக்கதேவர் காட்டுகிறார்.
மேரு மந்திர புராணம் என்ற காப்பியமும் இந்தக் கொல்லாமைக் கோட்பாட்டைப் போதிக்கிறது. கொல்லாமை விரதத்தைப் பின்பற்றாவிட்டால் கொடுநரகு கிடைக்கும் என்று அச்சுறுத்துகிறது.

நீதிநெறி விளக்கம் என்ற அறநூல் (94)  மிகுதியான நாற்றமடிக்கும் இழிந்த இறைச்சியை ஏதேனும் ஒன்றால் பொதிந்து மூடி வைத்தாலும், அத்தீய நாற்றம் தூரத்திருப்பவர்கள் முகத்தை அடைந்து நாற்றம் தரும். அதுபோல யாருமறியாத இடத்தில் கூறிய பழிச்சொற்களும் தெய்வமே பறை அறைந்து தெரிவிப்பது போல ஊரெங்கும் விரைந்து சென்று பரவும். பழிச்சொற்களை யாரும் அறியார் எனக் கருததி வெளிப்படுத்தாதீர் என்பது கருத்து.
சிறுபஞ்சமூலம்  (32) ,  பிற உயிர்களைக் கொல்லாதிருந்து அவ்வுயிர்களின் இறைச்சியை உண்ணாதிருந்து உயர்பவன் உயர்கதிக்குச் செல்வான் என்கிறது. மேலும்  பாவம் செய்தவர் எவர் என்பதை, (68) உயிரைக் கொன்றவன், பிறர் செய்யும் கொலைக்கு உடன்பட்டவன், கொன்ற ஊனை விலைக்கு வாங்கியவன், அதனைச் சமைத்தவன், மற்றவர் பரிமாற உண்டவன் ஆகிய அனைவரும் பாவம் செய்தவர் ஆவர் என்கிறது.
திருவள்ளுவர் துறவறவியலில் முதலில் “அருளுடைமை என்ற அதிகாரத்திற்கு அடுத்து “புலால் மறுத்தல்” எனும் அதிகாரம் வைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் “ஊன்” உண்பது அருள் உடையவர்களுக்குப் பொருந்தாது என்னும் காரணம் பற்றி என்று பரிமேலழகர் தந்திருக்கும் உரை விளக்கம் கூர்ந்து நோக்குதற்குரியது.
       புலால் மறுத்தல் அதிகாரத்தின் தொடக்கத்திலேயே – முதல் குறப்பாவில், “உன் உடம்பைப் பருக்கச் செய்வதற்காக பிறிதோர் உயிரின் உடம்பை நீ தின்பாய் என்றால், அருள் உடையவன் என்று உன்னை எப்படிக் கூறமுடியும் ? அப்படி இருக்கும் உனக்கு இறையருள்தான் உதவுமா ?” என்று வள்ளுவர் கேட்கிறார்.
       புலால் என்பது பிறிதோர் உடம்பின் புண். எனவே, புலால் என்பது புண்ணைத் தின்பதற்குச் சமமாகும். உன் புண்ணையே நீ உண்பாயா ? அது இழிந்த செயல் அல்லவா ? எனவே, புலால் உண்பவன் தூயவனல்லன். உணவுப் பழக்கம் உள்ளத்தை மாற்றும். எனவே உன்னிடம் எப்படி இரக்கத்தை எதிர்பார்க்க முடியும் ? அருளுடைமையே இறைத்தன்மை உடையவனுக்கு இன்றியமையாதது. ஆகவே, புலால் உணவை மேற்கொள்ளும் எந்தச் சமயத்தவரும், திருவள்ளுவப் பெருந்தகையின் உள்ளக்கிடக்கையை அறியாதவரே ஆவர். அதனால், அருளுள்ளம் கொண்ட எவரும் புலால் உண்ணுதல் கூடாது என்பது இதன் மூலம் புலப்படும்.
       அருளுடையமை ஒன்றே ஒருவருக்கு இறைத்தன்மையை ஏற்படுத்தும். அருளினும் அன்பே பெரிது. அன்பு தாய், அருள் குழந்தை. தாயின்றிக் குழந்தை இல்லை. அன்பு இன்றி அருள் இல்லை. முதலில் ஒவ்வொரு மனிதனும் அன்புடைமையைப் பேண வேண்டும். குழந்தைப் பருவத்திலிருந்தே இப்பணி தொடங்க வேண்டும். பக்குவம் வாய்க்கப்பெற்ற நிலையில், அன்பு முதிர்ந்த நிலையில் அதுவே அனைத்து உயிர்களிடத்தும் கொள்ளும் அருளாக மாறும். இதனால்தான் “அருள் என்னும் அன்பு ஈன் குழவி” என்றார் வள்ளுவர்.
ஓர் உயிரைக் கொல்லாமலும், ஊனைத் தின்னாமலும் இருப்பவனை எல்லா உயிர்களும் கரம் குவித்து வணங்கும் (10-10) என்கிறார். மற்றொரு குறளில், ஒருவன் ஊனை உண்டால், அவனை விழுங்கிய நரகம் வெளியே உமிழ வாய் திறக்காது என்கிறார். ஒருவன் ஊன் தின்பதன் காரணமாகத்தான் ஓர் உயிர் கொல்லப்படுகிறது. ஓர் உயிரைக் கொல்லாமல் இருந்தால், பொருள் காரணமாக ஊனை விற்பவர் எவரும் இல்லை என்கிறார்.
       புலால் உண்பவர் பிற உயிர்களிடத்து அருள் இல்லாதவரே ஆவார். இவர்கள் கங்கை முதலிய புண்ணிய  தீர்த்தங்களில் நீராடினாலும், கடவுளை பூசித்தாலும், பலகோடி தானங்கள் செய்தாலும், ஞான சாத்திரங்களை ஓதி உணர்ந்தாலும் புலாலை தள்ளாது புசித்தவன் நரகத்தை அடைவான். ஓர் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்டவனது பாவம் தலைமுறை தலைமுறையாய்த் தொடர்ந்து வரும் என்கிறார்.
       உயிர்களெல்லாம் கடவுளுக்குத் திருமேனிகள். அவ்வுயிர்களுக்கு நிலைக்களமாகிய உடம்புகளெல்லாம் கடவுளுக்கு ஆலயங்கள். ஆதலால் கடவுளிடத்து மெய்யன்புடையவர்கள் அக்கடவுளோடு உயிர்களுக்கு உடலாகிய தொடர்பு பற்றி அவ்வுயிர்களிடத்தும் அன்புடையவர்களே ஆவார். பிற உயிர்களிடத்து இரக்கமில்லாதவர் தம் உயிர்க்கு உறுதி செய்து கொள்ளமாட்டார்கள். வள்ளுவரும் – வள்ளலாரும் கூறிய நெறிகளைப் பின்பற்றினாலொழிய, இதுபோன்ற மக்கள் உய்வதற்கு வேறு வழி கிடையாது.
       “மாமிசம் சாப்பிட்டால்தான் பலம் என்று சிலர் நினைக்கிறார்கள். பலத்திற்கு எப்போதும் யானையை உபமானமாகச் சொல்கிறோம். “யானை பலம்” என்கிறோம். மற்ற பிராணிகளுக்கு இல்லாத பலம் அதற்கிருக்கிறது. ஆனால், அந்த பலம் மாமிசம் சாப்பிடுவதாலா வந்தது ? வெறும் புல், தேங்காய் மட்டை இவற்றை தின்கிற யானைக்குப் பலமா இல்லை ? அவ்வளவு பலம் இருந்தும் அது புலி சிங்கம் மாதிரி பாயாமல் சாந்தத்தோடு இருக்கிறது. அதனால்தான் அதை ரட்சித்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் காஞ்சி மகாபெரியவர். இதிலிருந்து மாமிச உணவினால் பலம் வராது, தீமையே விளையும் என்பதை உணர வேண்டும்.
“உயிர்களைக் கொல்லச் சொன்னவன், கொன்றவன், ஊனை அறுக்கிறவன், அதனை விற்கிறவன், அதனை வாங்குகிறவன், அதனைச் சமைக்கிறவன், பரிமாறுகிறவன், தின்கிறவன் என்னும் அவர்கள் அனைவருங் கொலைகாரர்களென்று சொல்லப்படுகிறார்கள் என்னும் வடமொழி மனுமிருதியினாலும் தெளியப்படும்.
இவ்வளவு இழிந்ததாக இருத்தலினாலேயேதான் உயிர்க்கொலை செய்பவர்களும் அதற்கு ஏதுவாய் இருப்பவர்களும் இழிகுலத்தவரென்றும், அப்புலைத் தொழிலைவிட்டுச் சைவவொழுக்கம் பூண்டவர்கள் உயர்குலத்தவரென்றும் வகுக்கப்படுவாராயினர்.
மோட்சம் செல்ல விரும்புபவன், கொல்வது உட்பட எந்த ஹிம்சையும் செய்யக் கூடாது என்பதை உறுதியாக உபதேசித்தனர். ஆக, மோட்ச தர்மம் எனும் சாஸ்திரத்தில் கொல்லாமை எனும் கொள்கை அழுத்தந் திருத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.

தாயுமானவரின் கொல்லா விரதம்: 
எளிய உயிர்களிடம் அருள் உணர்வோடு நடந்து கொள்ளாதவன், பிறரிடம் அருள் உணர்வோடு நடந்து கொள்ள மாட்டான். அதனால் மருள் உணர்வு தலைதூக்கி, அவனது வாழ்வை அது பாழ்படுத்திவிடும். விரதத்திலேயே தலைசிறந்த விரதமான கொல்லா விரதத்தைத் தாயுமான சுவாமிகள் முதன்மையாகவும் அழுத்தமாகவும் (அகவல் 93-100)
கூறியுள்ளார்.
மனத்தாலும் நினைக்கத் தகாத பஞ்சமா பாதகங்களுள் ஒன்று கொலை செய்தல் என ஆசாரக் கோவை (37) கூறுகிறது. இப்பாதங்கங்களை எண்ணுவோர் இகழப்படுவது மட்டுமல்லாமல், நரகத்திற்குப் பயணமும் மேற்கொள்வர் என்கிறது. எனவே, கொல்லாமையே அறங்களுள் எல்லாம் தலைசிறந்த அறமாகும்.

மனிதனின் உணவு – உடலும் மனமும் சார்ந்தது
    “ஆஹார – சுத்தௌ ஸத்வ சுத்தி – ஒருவனது ஆஹாரமானது தூய்மையானதாக இருந்தால் அவனது ஸத்வம் (உடலும் உள்ளமும்) தூய்மையாக இருக்கும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. வேதப் பயண்பாட்டைப் பின்பற்றி வந்தோர் வழி வழியாக, தாம் உண்ணும் உணவு குறித்து கவனத்துடனும் கண்டிப்புடனும் இருந்தனர். காரணம் யாதெனின் உணவு சமைப்பவரின் மனநிலையும், உணர்வுகளும் உணவைப் பாதிக்கும். அசுத்தமான பழக்க வழங்கங்களையும் அசுத்தமான தீய உணர்கள், எண்ணங்கள் மற்றும் மனநிலை கொண்டோரால், தயாரிக்கப்பட்ட உணவை உண்ணும் பக்தர்கள், சமைப்பவரின் மனநிலையால் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, அவர்களது பாவகரமான கர்மாக்களில் (தீவினைகள்) பங்கெடுத்துக் கொள்ள நேரிடும் என்கிறார் சுவாமி பிரபுபாதா (பக்தி யோகம் - ஓர் அறிமுகம், பக்.62). மனித வாழ்வு மனம் போனபடி வெறுமனே வாழ்வதற்கு ஏற்பட்டதல்ல. அது இறைவனை அறிந்துகொள்வதற்காகவே ஏற்பட்டது. இறைவனை அறிவற்கு உதவக்கூடிய அந்த மனதைப் போற்றிப் பாதுகாக்க ஆரோக்கியயான உணவுப் பழக்கம் அவசியம்.

உணவும் மனமும்
       “நம் மனதிற்கும் நாம் உண்ணும் உணவிற்கும்  தொடர்புண்டா? ஆங்கிலம் முதலான மேலை நாட்டுக் கல்வியைக் கற்ற அறிஞர்கள் உணவிற்கும் மனதிற்கும் தொடர்பே இல்லை என்றும், நாம் உண்ணும் உணவு உடல் வலிமை என்ற ஒன்றையே நமக்குத் தருகின்றது என்றும் கூறிவருகின்றனர். மேலும் மக்களுள் பெரும்பான்மையினர் தாம் உண்ணும் உணவு உடம்பிற்கு வலிமையைத் தந்துவிட்டுக் கழிவுப்பொருளாகிய மலமாகி நம் உடம்பை விட்டு நீங்குகின்றது என்றுதான் கருதுகின்றனர். எனவே, உணவிற்கும் மனதிற்கும் தொடர்பே இல்லை என்பது பெரும்பான்மையினர் கருத்தாகும். ஆனால், நம் நாட்டில் தோன்றிய திருமந்திரம், சசிவன்னபோதம், பகவத்கீதை முதலான ஞான நூல்களெல்லாம் உணவிற்கும் மனதிற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுகின்றன (அ.சிவபெருமான், தமிழும் அறிவியலும், பக். 62)

உண்ணும் உணவும் மூன்று கூறும்:

        ஒருவர் உண்ணும் உணவு உடல் (வலிமை), மனம், மலம் (கழிவுப் பொருள்) ஆகிய மூன்று கூறாக ஆகும் என்பதை திருமூலர்  கூறியுள்ளார்.






        “அருந்திய அன்னம் அவைமூன்று கூறாம்
        பொருந்தும் உடல்மனம் போம்மலம் என்ன
        இருந்தும் உடல்மல மாம்கூறும் சேர்ந்திட்டு
        இருந்தன முன்னாள் இரதம தாருமே

இப்பாடலின் கருத்தை அடியொற்றி, சசிவன்னபோதம் என்ற ஞானநூல்,

        “ஒருகூறு மலமாகும் ஒருகூறு உடம்பாகும்
        ஒருகூறு மனமாகும் உண்டற்ற அன்னம்

என்று குறிப்பிடுகிறது. ஒருவர் உண்ணும் உணவு தூல உடம்பிற்கு வலிமையைத் தரும் என்பதையும், கழிவுப் பொருளாகிய மலமாகும் என்பதையும் எல்லோரும் நன்கறிவர். ஆனால், உண்ணும் உணவின் ஒருகூறு மனமாகுமா? இக்கருத்தை எவ்வாறு ஏற்பது எனப் பலரும் கூறுவர். இதனை மிக எளிதில் விளக்க இயலும். ஊமத்தை என்னும் தாவத்தையும் கஞ்சாவையும் ஒருவர் அருந்தியவுடன் அவருக்கு மயக்கம் வருகின்றது. கள், சாராயம், அபின், முதலான பொருள்களை ஒருவர் பருகியவுடன் அவருக்கு மயக்கம் வருகின்றது. இவ்வாறு ஒருவர் அருந்திய ஏதோவொன்று அதன் குணத்திற்குத் தக்கவாறு அவரது உடம்பில் மாற்றத்தை உண்டுபண்ணுவதால் உணவிற்கும் மனதிற்கும் தொடர்பு உண்டு என்று நம் அருளாளர்கள் கூறியுள்ளனர். எனவே உணவு மனமாகும் என்பது கருத்து என்னவெனில் உண்ட உணவால் அவ்வுணவின் பண்பாக மன உணர்வு தோன்றும் என்பதேயாகும்.

உணவும் முக்குணமும்
        ஒவ்வொருவரின்  மனமும் மூன்று குணங்களுக்கு இடமாகத் திகழ்கிறது.
1.   சாத்துவிகம் அல்லது சத்துவம்
2.   இராசதம் (இராஜதம்)
3.   தாமதம் (தாமஸம்)






பகவத்கீதை, குணத்ரய விபாக யோகம் (14) என்ற அத்தியாயத்தில், மக்கள் உண்ணும் உணவினை வைத்து, சத்துவ குணத்தார் உணவு, இராசத குணத்தார் உணவு, தாமச குணத்தார் உணவு என்று மூன்றாக வகைப்படுத்திக் கூறுகிறது. அம் மூவகை உணவுகள் வருமாறு:
1.   சத்துவகுணத்தார் உணவு:
ஆயுள், அறிவு, வலிமை, உடல்நலம், இன்பம், விழுப்பம் ஆகிய இவை உண்டாவக்குபவை. இன்பச்சுவையை விளைவிப்பவையும், பசையுள்ளவையும் ஆகிய இவையெல்லாம் சத்துவகுண உணவாகும்.
2.   இராசத குணத்தார் உணவு:
கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, மிகச்சூடானது, காரம், வறட்சி, எரிச்சல் இவற்றை உண்டாக்குபவை. காமம், சினம் முதலானவற்றை உண்டாக்குவன இவ்வுணவின் தன்மை.
3.   தாமச குணத்தார் உணவு:
காலம் கழிந்தது, சுவையற்றது, கெட்ட நாற்றத்தை உடையது, மிகப் பழைமையானது, தூய்மையற்றது, வேகாதது முதலானவை இவ்வுணவின் தன்மை. புலால், கள், சாராயம் முதலானவை இதில் அடங்கும்.

“சத்துவம், ராஜசம், தாமஸம் என்னும் பிரகிருதியிலிருந்து உண்டாகும் குணங்கள், அழிவில்லாத தேகியான ஜீவனை (அழிகின்ற) தேகத்தோடு பிணைத்து வைக்கின்றன.(5). அவற்றில் சத்வ குணமானது மாசற்றதும், ஒளிபொருந்தியதும், துன்பமற்றதும் ஆகும். எனவே, அது ஜீவனை சுகத்தாலும் ஞானத்தாலும் பந்தப்படுத்துகிறது (6). ரஜோகுணம் இச்சை வடிவானது. ஆசையையும் பற்றுதலையும் உண்டாக்குவது. அது தேஹியை (ஜீவனை) கர்மப் பற்றால் பந்தப்படுத்துகிறது (7). தமோ குணமானது அறியாமையில் பிறந்ததென்றும், அது எல்லா உயிர்களுக்கும் மயக்கத்தை உண்டாக்குவது என்றும் அறிவாய். அது கவனமின்மை, சோம்பல், உறக்கம் இவற்றால் பந்தப்பட்டது. (8) எப்போது இத்தேகத்தின் எல்லா புலன்களின் வழியாக ஞானம் பிரகாசிக்கிறதோ, அப்பொழுது சத்வ குணம் பெருகியுள்ளது என்று அறிந்துகொள்வாய்.(9). சத்வ குணத்தார் மேல்நோக்கிப் போகிறார்கள். ராஜஸ குணத்தார் மத்தியில் நிற்கிறார்கள், கீழோனான தாமஸ குணத்தோர் கீழ்நோக்கிப் போகிறார்கள்(18) தேகத்தால் உண்டாகும் இம்மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, இறப்பு, மூப்பு, துக்கம் இவைகளிலிருந்து விடுபட்ட ஜீவன் மரணமற்ற வாழ்வை அடைகிறான்(20) என்கிறது பகவத்கீதை.
கீதை, மனிதர்களுக்கு உண்டாகும் மூன்றுவகை குணங்களையும் அக்குணங்கள் அவரவர் உண்ணும் உணவுகளின் மூலமும் உண்டாகிறது என்பதையும் கூறுகிறது. இக்குறிப்பிட்ட மூவகைக் குணங்களுள் சத்துவகுணம் மேலிட்டால் சன்மார்க்கமான தெய்வகுணம் உண்டாகும் என்றும், இராசத குணம் மேலிட்டால் உலக வாசனை (உலகப்பற்று), தேகவாசனை முதலான எண்ணங்கள் உண்டாகும் என்றும், தாமசகுணம் மேலிட்டால் துன்மார்க்கமான (தீய) எண்ணங்கள் உண்டாகும் என்றும் தாண்டவராய சுவாமிகள் இயற்றிய கைவல்ய நவநீதம் என்னும் வேதாந்த நூல் குறிப்பிடுகிறது (கைவல்ய நவநீதம், சந்தேகம் தெளிதற்படலம், செ.16).  நாம் உண்ணும் உணவிலிருந்து அவ்வுணவின் பண்பாக மன உணர்வு தோன்றுகிறது. அம் மனவுணர்வு நல்ல உணர்வு, தீய உணர்வு என்று இருவகைப்படும். ஆகையால் தீய உணர்வுகளைத் தரும் உணவுப் பொருள்களை விலகிவிட்டு, நல்ல உணர்வுகளைத் தரும் இயற்கை உணவுகளை – தாவர உணவுகளை உட்கொண்டு நல்லுணர்வை வளர்த்துக்கொண்டு  மனிதருள் தெய்வமாக உயர வழி-வகை செய்து கொள்ள வேண்டும்.
        மனமும் உடலும் ஒன்றோடொன்று தொடர்புடையன. ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான உடலுக்கு வித்திடும். அகத்தின் அழகு முகத்தில் மட்டுமல்ல அகத்தின் அழுக்குகளும் முகத்தில்  வெளிப்பட்டுவிடும். எனவே மனதைக் காக்க நல்ல உணவுகளை உட்கொள்வது அவசியம்.
        நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் அமைதியுடன் ஆரோக்கியத்துடன் நல்ல நெறியில் வாழ் வேண்டுமானால், உணவில் சத்துவ குணத்தை விளைவிக்கும் தாவர உணவுகளை மட்டுமே உட்கொண்டு, நல்ல சைவ உணவு நெறியைப் பின்பற்றி, உணவு முறையாலும் இந்நாட்டை உயர்த்திக் காட்ட முடியும் என்று எண்ணம்படிக்கு, வள்ளுவர் கூறியது போல் “கொல்லான், புலான் மறுத்தானை எல்லா உயிரும் கைகூப்பித் தொழும்என்று அனைத்துயிரும் தொழும்படியாக வாழ்ந்துகாட்ட வேண்டும்.

நோயின்றி வாழ உணவே மருந்து
       
        தமிழர் மருத்துவத்தில் உணவும் மருந்தும் ஒன்றாக அமைந்திருப்பது வியப்புக்குரியது. காய், கனிகள், கீரை வகைகள், கடுகு, மிளகு, சீரகம், சுக்கு, திப்பிலி, எண்ணெய் வகைகள் முதலிய பொருள் எல்லாம் மருத்துவ குணம் நிரம்பியவை. உண்ணும் உணவுப் பொருள்களே மருந்தாக அமைகின்ற இம்முறை (தமிழ் அல்லது சித்த மருத்துவமுறை) பிற நாடுகளில் இல்லாத ஒன்று.
 தமிழர்களிடை “ஆளும் சரக்கு அருபத்தி நான்கு எனச் சொல்லக்கூடிய தானியங்கள், கீரைகள், காய்கள், கனிகள் என 64 வகை உணவுப் பொருள்கள் இருக்கின்றன. உணவு உண்ணும் முறை பற்றியும் நோய் என்பன பற்றியும் வள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.
        உணவே மருந்து, மருந்தே உணவு என்று நம் முன்னோர் கூறியுள்ளனர். அவர்கள் கண்ட ஊட்டமிக்க உணவுதான் புறவாழ்விலும், அகவாழ்விலும் சிறந்து விளங்க அடிப்படையாக இருந்துள்ளது. மாறிவிட்ட இன்றைய உணவுமுறை நோய்களுக்கே இடமாக இருக்கின்றன. எதை உண்ண வேண்டும், எப்படி உண்ண வேண்டும். எப்படி உறங்க வேண்டும் என்பதையெல்லாம் ஆசார கோவை என்ற இலக்கியம் கூறுகிறது. ஆனால் அதையெல்லாம் இன்றைக்கு யாரும் பின்பற்றுவதில்லை. மாறிவிட்ட இன்றைய முறைகேடான  உணவுமுறையே பலவகையான நோய்களுக்கு அடிப்படையாகிவிட்டது. இதனால் இன்று உலகில் 95 விழுக்காது நோயுள்ளோரே மிகுந்துள்ளனர்.
 இதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள இயற்கை உயிர்ச் சூழலை அழிவிலிருந்து  தடுக்கவும் மீண்டும் நாம் மரபார்ந்த உணவு முறைக்கு மாறவேண்டும். மரபு உணவுகள் உடலுக்குத் தேவையான ஊட்டத்தினை அளித்து நோய் எதிர்ப்பாற்றலை மிகுவிக்கிறது. நோயை அண்டவிடாமல் செய்கிறது.   உதாரணத்துக்கு நாம் உண்ணும் தாவர உணவாகிய சில உணவு வகைகளில் உள்ள பொருள்களின் மகிமையை அறிவியல் நோக்கோடு காண்போம்.

1.   பீட்டா கரோடின் – “காய்கறியில் உள்ள பீட்டா கரோடின் பொருளே வைட்டமின் “ஏயாக மாறுகிறது என்கிறார்கள் ஆக்ஸ்போர்ட்டில் பணிபுரியும் ரிச்சர்ட் பிடோ மற்றும் அவருடைய சகாக்கள் விலங்கின் உணவில் உள்ள வைட்டமின் “ஏக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறியுள்ளனர். இதனால் காய்கறிகள் மற்றும் பழங்கள் புற்று விகிதத்தைக் குறைப்பதில் முதலிடம் பெற்றுள்ளன. இவரது அணுகுமுறை விஞ்ஞானிகளை நிம்மதிப் பெருமூச்சுவிட வைத்துள்ளதாம். காய்கறிகள், பழங்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் சுமார் 500 கிரோடினாய்டு என அழைக்கப்படும் கூட்டுப் பொருள்கள் காணப்படுகின்றது. இதில் சுமார் 10 விழுக்காடு பீட்டா கரோடின். இதுவே நமது உடலுக்குத் தேவையான வைட்டமின் “ஏ ஆக மாற்றப்படுகிறது. மேலும் இது காரட்டில், இனிப்புக் கிழங்கில், ஸ்பைனக் மற்றும் கேல் ஆகியவற்றில் அதிகம் காணப்படுகிறதாம். (பேரா. டாக்.நரேந்திரன், அறிவியல் ஒளி மாத இதழ், பக்11)
2.   அமெரிக்கா தவிர்த்து உலகமெங்கும் 90 விழுக்காடு “ஏ வைட்டமினைத் தாவர உணவுகளிலிருந்தே பெறுகிறது. ஆசியாவின் பச்சைக் காய்களே இதற்கு முக்கியக் காரணம்.  காரட் நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கிறதாம். ஓர் ஆய்வு, பீட்டா கரோடினைச் சரியாக அடையாளம் காட்டிய வைட்டமின் “ஏயை மட்டுமல்லாமல், இது நுரையீரல் புற்றுக்கு எதிராகப் பாதுகாப்புக் கொடுக்கும் எனவும் கூறுகிறது. குறிப்பாக ஆண்கள் மிகவும் அதிகமாக பீட்டா கரோடின் உள்ள உணவை உண்பர்களை ஓப்பிடுகையில் மிகவும் குறைவாக உண்பவர்களிடையே 7 மடங்கு அதிகமாக நுரையீரல் புற்று காணப்பட்டது. இதனால்தான், “அரைக்கோப்பை காரட் தினமும் உண்பதால் நுரையீரல் புற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று நுபுணர் மரு.ஷகிலி கூறுகிறார்.  இந்தப் பீட்டா கரோடின் கரும்பச்சை இலை தழைகள், ஆரஞ்சு, காய்கறிகள் மற்றும் பழ வகைகளில் காணப்படுகின்றனவாம்.
3.   மாதுளம் பழத்தில் வைட்டமின் கே, பொட்டாஷியம், சுண்ணாம்பு, சர்க்கரை, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும் உள்ளன. இப்பழம் உண்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதயத்திற்கும் மூளைக்கும் மிகுந்த சக்தியை அளிப்பதோடு பித்தம் மற்றும் இருமலையும், தாகத்தையும் கட்டுப்படுத்துகிறது. உடல் சூட்டைத் தணிக்கிறது. பற்கள் உறுதிப்படுகின்றன.
4.   எலும்மிச்சம் பழத்தில்  வைட்டமின் சி உள்ளது. இது ஸ்கர்வி என்ற நோயைப் போக்குகிறது. ரத்தத்தை சுத்தம் செய்கிறது. முடி உதிர்வதையும், ரத்தக் கசிவையும் போக்குகிறது. மேலும் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரமாகக் கருதப்படும் அஸ்காரிக் அமிலம் இதில் உள்ளது. சிட்ரிக் அமிலம் இருப்பதால் இது தொற்று நோய்க் கிருமிகள் அண்டாமல் காக்கிறது. பித்தம், கடுமையான தலைவலி, வெண் தேமல் போன்றவற்றையும் போக்குகிறது. இதிலுள்ள அல்கலைன் என்னும் காரத்தன்மைமிக்க வேதிப் பொருள் குடலில் உறைந்திருக்கும் அமிலத்தைப் போக்கவும், கழிவுப் பொருள்களை வெளியேற்றவும் துணைபுரிகிறது.
       
தாவரங்களுக்கும் உயிர் உண்டு. அவையும் சிந்திக்கின்றன என்பதை அண்மையில் ஜகதீஷ்சந்திர போல் என்பவர் ஆராய்ச்சி மூலம் தெரிவித்துள்ளார். ஆனால் ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் புல்லும் மரமும் ஓரரிவுடைய உயிர் என்று சொல்லிவிட்டார்.

 தாவர உணவின் அவசியமும் அத்தியாவசியமும்
      
நமது உடலானது இரத்தம், எலும்பு, தசை, கொழுப்பு, நரம்பு, உமிழ்நீர் அகச்சுரப்பியல் நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் யாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இதை “யாக்கை என்று கூறுகிறோம்.  உடம்பிற்கு இந்த ஏழு தாதுக்களையும் கொடுக்கவே நாம் அறுசுவை உணவை உண்கிறோம். உணவை அறுசுவை உணவு என்றும் அடைமொழி கொடுத்து அழைக்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நம் சங்க இலக்கியங்களில் “அறுசுவைஎன்ற தொடர் வருகிறது இது நம் தமிழ்மொழியில் மட்டுமே காணப்படும் சொல்
நாம் உண்ணும் உணவில் புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, உயிர்ச்சத்து, தாதுப் பொருட்கள் ஆகிய ஐந்து வகையான சத்துக்களும் இவை தவிர, உடல் நலத்திற்குத் மிகவும் தேவையான நார்ச்சத்தும், தண்ணீரும் உள்ளன.
கீரைகள், காய்கறிகள், பழங்கள், தேங்காய், பயறுகள் முதலியவற்றை இயற்கை உணவுகள் என்று சொல்கிறோம். இவற்றைப் பச்சையாகச் சாப்பிட்டால் இவற்றில்  உள்ள சத்துக்களில் 90 சதம் நம் உடலுக்குக் கிடைக்கின்றது. ஆனால், வேகவைத்துச் சாப்பிட்டால் 30 சதம்தான் கிடைக்கிறது. வேக வைக்கும்போது “சி உயிர்ச்சத்து (vitamin c), போலிக் அமிலம் (folic acid),  என்ற “பி உயிர்ச்சத்து  (vitamin B)  முழுமையாக அழிந்து போகிறது. அதனால் பச்சையாகச் சாப்பிடுவது நல்லது.
       கீரைகளில் “ஏ உயிர்ச்சத்து, “பி உயிர்ச்சத்து முதலிய உயிர்ச்சத்துக்கலும், சுண்ணாம்புச் சத்து, மணிச்சத்து, மிகுந்தளவில் உள்ளது. அலகு (International Units)  “ஏ உயிர்சத்தும் 173 உதாரணமாக 100 கிராம் தண்டுக் கீரையில் 2500 அனைத்துல அலகு “பி உயிர்ச்சத்தும் 173 மில்லிகிராம் “சி உயிர்ச்சத்தும் 397 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும் 83 மில்லி கிராம் மணிச்சத்தும் 26 மில்லி கிராம் இரும்புச் சத்தும் உள்ளன.
       நீரிழிவு நோயாளிகள் சில  கிழங்கு வகைகளைச் சாப்பிடக் கூடாது என்று சொன்னாலும் இதற்கு விதி விலக்காக “காரட்இருக்கிறது. 100 கிராம் கேரட்டில் 4300 அலகு உயிர்ச்சத்து “ஏயும் 60 அலகு “பி உயிர்சத்தும் 3 மி.கிராம் “சி உயிர்ச்சத்தும் 80 மி.கிராம் சுண்ணாம்புச் சத்தும், 3 மி.கிராம் மணிச்சத்தும் 2 மி.கிராம் இரும்புச் சத்தும் உள்ளன. இது போல பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், செம்பு போன்ற தாதுப் பொருட்களும் உள்ளன. காரட்டில் உள்ள “ஏ உயிர்ச்சத்து கண்பார்வையைக் கூட்டுகிறது. இதில் உள்ள “டோக்கக்கைனின் இன்சுலின் மாதிரி நீரிழிவு நோயைத் தணிக்கிறது. “ஈ உயிர்ச்சத்து புற்றுநோய் திசுவறைகளின் வளர்ச்சியைக் குறைக்கிறது. உடலுக்குத் தேவையான ஏழு ஏமினோ அமிலங்கள் இருக்கின்றன. அதனால் எல்லோரும் தினமும் காரட் சாப்பிடுவது நல்லது என்கிறார் அ.சௌந்தரபாண்டியன் (கொஞ்சம் இயற்கையும் கொஞ்சும் நலமும், பக்.52)
       பழங்களில் நமக்குத் தேவையான உயிர்ச்சத்துக்களும் தாதுக்களும் இருக்கின்றன. உதாரணமாக 100 கிராம் பப்பாளிப் பழத்தில் 2020 அலகு “ஏ உயிர்ச்சத்தும் 136 மி.கிராம் “சி உயிர்ச்சத்தும் 17 மி.கிராம் சுண்ணாம்புச் சத்தும் 13 மி.கிராம் மணிச்சத்தும் 0.5 மி.கிராம் இருப்புச் சத்தும் இருக்கின்றன. உணவை எளிதில் ஜீரணிக்க வைக்கக்கூடிய “பப்பைன் இருக்கிறது. மாம்பழத்தில் “ஏ உயிர்ச்சத்தும் வாழைப்பழத்தில் பொட்டாசியமும் பேரிச்சம்பழத்தில் இரும்புச் சத்தும் மிகுதியாக உள்ளன.

ஊன் உணவைத் தவிர்க்க வள்ளுவர் கூறும் தீர்வு
      
வள்ளுவர் காலத்திற்கு முன் ஊன் உணவு என்பது தமிழர்களால் பழக்கமாக இருந்துள்ளது. வள்ளுவருக்கு காலத்தால் முற்பட்ட சமண, பௌத்த மதங்கள் ஊன் உணவை அன்பின் அடிப்படையில் தவிர்க்க அறிவுறுத்தியது. இக்கொள்கையை ஏற்றுக்கொண்ட வள்ளுவர் “புலால் மறுத்தல் என்ற ஓர் அதிகாரமே வகுத்தார். அதில் இறைச்சி வியாபாரத்தைத் தடுக்க ஓர் அற்புதமான தீர்வைத் தருகிறார்.
       “ஏன் ஒரு வியாபாரி, விற்பதற்காக விலங்குகளைக் கொல்கிறார்? நிச்சயமாகக் கொல்லப்பட்ட இறைச்சியை விலைக்கு வாங்கி உண்ணும் மனிதர்கள் இருப்பதால்தானே என எண்ணுகிறார். வாங்குவதற்கு ஆளில்லை என்றால் அந்த வியாபாரி தன் கடையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. எந்த ஒரு வியாபாரியும் பணத்திற்காக அல்லாமல் சமூக சேவைக்காகத் தன் வியாபாரத்தைச் செய்வதில்லை.
தான் உற்பத்தி செய்யும், விற்கும் பொருளை வாங்குவதற்கு வாடிக்கையாளர் இல்லை என்றால், ஒருகணமும் வியாபார்த்தைத் தொடராது தன் வியாபாரத்தைக் கைவிட்டுவிடுவார் என்பது திண்ணம். எனவே, நுகர்வதற்கு மனிதர் தயாராக இல்லை என்றால் இந்தப் பொருளை விற்பதற்கு வியாபாரிகள் தயாராகமாட்டார்கள் என்று வள்ளுவர் கருதி,

 “திறற் பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விரைபொருட்டால் ஊன்றருவார் இல் என்கிறார். சாதாரணமாகப் பார்த்தால் புலால் மறுத்தலை மட்டும் சுட்டியதாகத் தோன்றும். ஆனால் ஒட்டுமொத்த நுகர்வுக் கலாசாரத்தைத் தீர்ப்பதற்கான வழியையும் இதில் கூறியுள்ளார் வள்ளுவப் பெருந்தகை.

வாழும் நெறி
கொல்லாமை தவிர்த்தல் என்பது தமிழர்களிடைய தொன்றுதொட்டு இருந்து வந்த மரபாகும். உயிர் எல்லாம் பொதுவில் உளம்பட நோக்கவேண்டுமாயின் அதற்கு அடிப்படையாக அமைய வேண்டியது சைவ சமயம் வலியுறுத்தும் அன்பும், கருணையும் ஆகும். எவ்வுயிரையும் தம் உயிர்போல் பாவித்து அன்பு செய்வரின் உள்ளதில் இறைவன் தங்கி உறைவன் என்று வல்லார் வலியுறுத்திச் சொன்னார்.  ஆனால், இன்றைய நாகரிகம் என்ற போக்கு ஊனினை ஒழித்து உள்ளொளியைப் வளர்க்க மறந்து, எந்தவொரு சுப-அசுப நிகழ்ச்சிகளுக்கும் ஊனைத் தின்று உயிரை வளர்த்து, கூடவே தீராத நோய்களையும் பாவத்தையும் பெருக்கிக் கொள்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமாயின் அனைவரும் தாவர உணவுகளையே உட்கொள்ளப் பழகவேண்டும். தாவர உணவின் மகத்துவத்தை அறிந்து, அதை வளரும் தலைமுறையினருக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

முடிவுரை:
தாவர உணவுகளிலிருந்து, அதாவது இயற்கை உணவுகளிலிருந்து நமக்குக் கிடைக்கக்கூடிய பயன்கள் ஏராளம் உள்ளன. உணவே மருந்தாக உள்ளன.  இந்த முறையையே சைவர்கள் கடைப்பிடித்து கொல்லா விரதத்தைப் பூண்டு, அன்பு, இரக்கம், கருணை, ஜீவகாருண்யம் போன்றவற்றை வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்து உய்தி பெற்றனர் – பெறுகின்றனர். “உயிர்கள் அனைத்திடமும் எப்போதும் ஆன்மா நட்பு கொண்டிருக்க வேண்டும். பிற உயிர்களைத் தம் உயிராக எண்ணும் பரந்த மனம் எழும்போது, நாம் உயர்ந்த தியாகளாகத் திகழ்கிறோம் என்றார் மகாவீரர்.  எனவே, அனைத்துயிரையும் தன்னுயிர் போல் எண்ணி  உயிரிரக்கத்துடன் வாழ்ந்து, பிற உயிர்களையும் வாழ விடும் அன்பு நெறியே சைவநெறி. இதை உலக மக்கள் அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால், உலகமே அன்புமயமாகும். ஜீவகாருண்யத்தில் சிறந்தோங்கும்.

பின் குறிப்பு

நான்கு ஆண்டுகளுக்கு முன்.... சென்னையில் நடந்த தாவர உணவு மாநாட்டில் கலந்து கொண்டு சுருக்கமாகப் பேசியதன் விரிவு இந்தக் கட்டுரை. 

Comments

Popular posts from this blog

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!