மணமுறிவைச் சந்திக்கும் ஒரு    பெண்ணின் அவஸ்தை

             ஆத்மதாகம் - இடைமருதூர் கி.மஞ்சுளா நாவல்
  (திருப்பூர் மந்திய அரிமா சங்கத்தினால் (2014 க்கான) சக்தி விருது பெற்ற நாவல்)
              
          சுப்ரபாரதிமணியன்
       
      ஆணின் துணையில்லாமல்  வாழ்வது பெண்ணுக்குத் தரும் சிரமங்கள் அளவில்லாததுதான். தந்தையின் இழப்பு அது போன்ற சமயங்களில்  பெரிய இடிதான். அப்படியொரு பெண்ணின் அனுபவங்களை விவரித்திருக்கிறார் இடைமருதூர் கி.மஞ்சுளா இந்த நாவலில்.

நீதிமன்ற வாசலில் அவள் சந்திக்கும் வெவ்வேறு நபர்கள் இன்னும் வேதனை தருகிறவர்கள். விவாகரத்து முடிந்து விட்டால் போதும். நீதிமன்றத்திற்கு வந்து போகும் செலவாவது மிஞ்சுமென்று  ஏக்கப்படும் சில பெண்கள். குழந்தைக்காக விட்டுக்கொடேன் என்று ஏங்கும் சிலர். சில உறவுகளை நகங்களை வெட்டுவது போல் வெட்டினால்தான் இரு தரப்பினரும் வாழ முடியும் என்ற கட்டாயம்  வரும்போது மட்டுமே வரும் கதாபாத்திரங்கள் சிலதும் கூட.

59 வயது பெண்ணும் அங்கு காணப்படுகிறாள்.  தாம்பத்ய உறவுச் சிக்கல் அந்த வயதிலும் அவளுக்கு.. எட்டுமாத கர்ப்பதோடு வந்து நிற்கும் பெண் இன்னொருத்தி . அவள் கணவன் வேறு ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு இவளைக் கை விட்டிருக்கிறான். சென்னை என்ற நகரம் பேச வைத்த கட்டாயங்களை இந்தப் பெண் பாத்திரங்கள் மூலம் காண்கிறோம். ரத்னாவுக்கு தினேஷுடனான உறவு கெட்டு விட்டது. விலகிப் போவது.. விவாகரத்து வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை.

நாலாயிரம் பேர் வந்து வாழ்த்தும் போது கேட்பதில்லை உனக்குப் பிடித்திருக்கிறதா என்று. நாற்பது பேர் மத்தியில் பிரிவதற்கு சம்மதமா என்று  கேட்டு இம்சைகள் பற்றி விரிவாகவே பேசுகிறார். இதுபோல் கல்யாணம், பந்தம் பற்றிய பல விவாதங்களை மஞ்சுளா  இந் நாவலில் வைக்கிறார். ஒரு நாளில் இது போல் நாற்பது ஐம்பது பெண்களைக்  காண்கிற போது பெண் அடைகிற மன உளைச்சலை   ரத்னா எதிர் நோக்குவதை இந்நாவல் சித்தரிக்கிறது.

 இரண்டாவது கோட்டை என்று சொல்லப்படும் விதவைகளும், விவாகாரத்தானவர்களும்  தங்களின் பாதுகாப்புக்காக ஏற்படுத்திக் கொள்ளும் இரண்டாவது கோட்டையின் வில்லன்கள் பற்றிய நிறைய யோசிப்புகள்  இருக்கின்றன.

   தாமதமாகும் விவாகரத்து வழக்குகள் பற்றிய நிறையக் கவலைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் 3000 வழக்குகளே நிலுவையில் இருந்தன. இப்போது 20,000. - ஆறு மாதங்களுக்குள் பதிவு செய்யப்படும் வழக்குகள் தீர்க்கப்பட வேண்டும் என்று இப்போது உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. மனமொத்து விவாகரத்து கேட்பவர்களுக்கு உடனே விவாகரத்து தந்து விட வேண்டும் என்று அறிவுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. 
 திருமணத்திற்கு முன் தன் மனைவி கருக்கலைப்பு செய்தவர் என்பதற்காய் எனக்குத் தெரிந்த ஒருவர் விலக்கு கோரினார்.. தன் மனைவி அடிக்கடி தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறாள். அது மன நோய்  என்று கோரினார். ஒருவர்.. கிறிஸ்துவ சட்டம் 1969, பார்சி திருமணச் சட்டங்கள் சரியான பாலியல் உறவு இல்லையென்றால்   விலக்கு கோரலாம் என்கிறது.. கண்டதும் காதல். காதலித்ததும் கல்யாணம் என்று தொடர்வதே விலக்குகளுக்குக் காரணம் என்கிறார்கள் சிலர். அசைவக்காரர்கள் சைவத்துக்கு மாற முடியாமல் பல விலக்குகள் (சைவ, அசைவ காதலர்கள் மத்தியில் இப்பிரச்சினை ) ரதனாவின் பிரச்சினையும் இது போன்றதே. .

 தன் அவஸ்தைகளிலிருது விலக ஓவியங்களின் மீதான ஈடுபாட்டையும் அவள் மேற்கொள்கிறாள். அப்போதுதான் ஜான் என்ற ஓவியனைச் சந்திக்கிறாள். இன்னொரு புறம்  இறந்து போன  ஜகந்நாதன் - அவள் அப்பாவின் கண்களை எடுத்துப் பொருத்தி நடமாடும் ஆணை சந்திக்க ரத்னா ஆசைப்பட்டு  ஒரு வகைத் தேடுதலை மேற்கொள்கிறாள். ஜகநாதனின் கண்கள் ஜான் என்ற ஓவியம் வரைவதில் அக்கறை கொண்டவனுக்கு  பொருத்தப்பட்டிருப்பதை அவன் ஒரு விபத்தில்    இறந்த பின் தெரிந்து கொள்கிறாள் ரத்னா.

அந்தக் கண்களை எடுத்து சலீம் என்ற ஒரு பையனுக்குப் பொருத்துகிறார்கள்.    சலீமின் பெற்றோர் மெக்கா சென்று விட்டுத் திரும்பும்போது வழியில் ஏற்பட்ட ஒரு மதக்கலவரத்தில் கொல்லப்டுகிறார்கள் சலீமின் பெற்றோர். சலீம் கண்பார்வையை இழக்கிறான்.

  ரத்னாவின் மணமுறிவு பற்றிய மன அவஸ்தகளை விவரிக்கும் நாவலாக வளர்ந்து ஏதோ  மதச்சார்பின்மையை வலியுறுத்த வலிந்து கிறிஸ்துவ, முஸ்லீம் கதாபத்திரங்களை அறிமுகப்படுத்தித் தொடர்கிறது. இது வலிந்து சொல்லப்பட நாவல் தடம் புரண்டு போகிறது.  ரத்னாவுக்கு ஆறுதலாய் இருந்த சங்க இலக்கியப் பாடல்களும், வசன கவிதைகளும், திரைப்படப் பாடல்களும் உயிர்ப்புடன் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

   ஆறுதல் தருவதற்கு இந்தப் பாடல்கள் மட்டும் போதாதே. அதை மீறி வாழ்க்கை துணை ஒன்று தேவை என்ற ஏக்கம் தொனிப்பதை இந்நாவல் காட்டுகிறது. நாவலின் முன்னுரையில் இது ஒரு பரிசுப் போட்டிக்கு எழுதப்பட்டதாகவும் பரிசு கிடைக்கவில்லை என்ற ஏக்கமும் வெளிப்படுகிறது. போட்டிக்கதை பரிசென்றாலே  மதச்சார்பின்மையை வலியுறுத்துவதுதான் என்ற பார்முலா தொடர்ந்து பரிசுக்காக எழுதிக் கொண்டிருக்கிறவர்களை பலியாக்குகிறது. இக்கதையும் அதில் பலியாகியிருக்கிறது. இல்லாவிட்டால் மணமுறிவைச் சந்திக்கும் ஒரு பெண்ணின் அவஸ்தையை சிறப்பாக இது வெளிக்கொணர்ந்திருக்கும்.

( ஆதம்தாகம் - டாலி டேட்டா பதிப்பகம், சென்னை 1 - ரூ75 )
சுப்ரபாரதிமணியன்

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!