இராதாகிருஷ்ணன் தத்துவம் - இராதையின் கண்மணி

இராதையின் கண்மணி   


by - - இடைமருதூர் கி. மஞ்சுளா

பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் கோபிகைகளுடன் தோழமை பூண்டு லீலைகள் புரிந்தது பரமாத்மா காதலிப்பதையும் காதலிக்கப்படுவதையும் உணர்த்துகிறது. இறைவன் ஒருவனே புருஷோத்தமன். இதர ஜீவாத்மாக்கள் எல்லாம் பெண் அம்சங்கள். இவர்களே கோபிகைகள். இவர்கள் நிலையிலிருந்து கடவுளை வழிபடுபவருக்கு அவன் ஒருவனைத் தவிர மற்றவெல்லாம் பெண்மயமாகவே காட்சி தரும். கோபிகைகள் கண்ணனைச் சூழ்ந்து புன்முறுவலுடன் ஆடுவதும் பாடுவதும் அன்புக் கடவுளிடம் ஆன்மாக்கள் சேர அடையும் குதூகலம்.


 
    பக்தர்கள் பகவானைக் காண பரிவுடன் அணுகும்போது, பகவானும் பக்தர்களைத் தன்னிடம் சேர்த்துக் கொள்ளத் தேடுகிறானல்லவா? கண்ணனுடன் லீலைகளில் ஈடுபட்டிருந்த கோபிகைகளின் தலைவியான உத்தம ஜீவனே "ராதை' என்பது. ராதையின் கண்மணியாக இருந்தவன் ஸ்ரீகிருஷ்ணன். இமைப்பொழுதும் கண்ணனை மனத்தால் பிரியாத பிரேம பக்தி உள்ளவள்தான் ராதை. ராதையின் பிரேம பக்தியில் கட்டுண்டு, விரும்பி எந்நேரமும் அவள் உள்ளம் புகுந்து உறைபவன் கண்ணன். அதனால்தான், பாமா, ருக்மணி ஆகிய இரு மனைவியருக்கும் அகத்திலும் புறத்திலும் அகப்படாத கண்ணன்,  ராதையின் அகத்தில் விருப்பமுடன் அகப்பட்டு, அவள் தூய அன்பில் எந்நேரமும் கிரங்கிக் கிடந்தான். பகவான் தூய மெய்யன்பனிடம்தானே இருப்பான். அந்த மெய்யன்பனே ராதை!




    ஒரு நாள் யசோதை கண்ணனைத் தேடிக்கொண்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்து,  இறுதியில் ராதையிடம் வந்தாள். கண்ணன் அவ்விடமும் இல்லை. "அவன் எங்கே?'  என்று  ராதையிடம் கேட்டாள். கண்மூடி பிரேம பக்தியில் (பிரபத்தி, மதுர பக்தி) ஆழ்ந்திருந்த - திளைத்திருந்த  ராதை பதில் ஏதும் சொல்லவில்லை. சிறந்து நேரம் கழித்து, ராதை   சுய நினைவு வந்ததும்,  யசோதை அங்கிருப்பதைக் கண்டு பணிவுடன் வணங்கி,  வந்த காரணத்தைக் கேட்டாள்.




தான் கண்ணனைத் தேடி வந்ததாய் யசோதை பதிலுரைத்தாள். "கண்ணன் இதுவரை இங்குதானே இருந்தான், இப்போதுதான் சென்றான், நீங்கள் அவனைப் பார்க்கவில்லையா?' என்று கேட்டாள் ராதை.

    அதற்கு யசோதை,  "நான் அவனைப் பார்க்கவில்லையே' என்றாள். உடனே ராதை, "நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு கண்ணனை நினைத்தால் அவனைக் காண்பீர்கள்' என்றாள்.
    அப்படியே யசோதை கண்ணன் உருவத்தை தியானித்தாள். ராதை தன் அன்பின் - பிரேம பக்தியின் ஆற்றலைச் செலுத்தியவுடன், யசோதை தான் தேடி வந்த கண்ணனைக் கண்டாள். இவ்வாறு  கண்ணனைத் தன் கண்மணிபோல் பெற்றிருந்த ராதையைப் பற்றி மகாகவி பாரதியார்,
 
"காதலெனும் தீவினிலே ராதே ராதே - அன்று
கண்டெடுத்த பெண்மணியே ராதே, ராதே!
காதலெனும் சோலையிலே ராதே ராதே - நின்ற
கற்பகமாம் பூந்தருவே ராதே ராதே!
மாதரசே, செல்வப் பெண்ணே ராதே ராதே - உயர்
வானவர்கள் இன்ப வாழ்வே ராதே ராதே!''


என்ற பாடல் பொருள் புதைந்தது.



 பக்தி என்பது ஒரு தீவு; அதில் பிரேமை என்ற ஒரு சோலை. அச்சோலையில் கற்பகமாய் உலாவுகின்றாள் ராதை  கிருஷ்ண பக்தர்களுக்கு. இறைவனின் ஆனந்த அம்சம்தான் ராதை. ராதையும் கிருஷ்ணனும் நித்திய பெண்மையையும் நித்திய ஆண்மையையும் குறிப்பிடுகிறார்கள். (குறிப்பால் உணர்த்துகிறார்கள்) ராதாகிருஷ்ணன் வடிவம் ஜீவாத்மா பரமாத்மா காதல் தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. ராதையாக நாம் மாறி கடவுளை வழிபட, அவன் நம் கண்மணியாகவும் ஒளிர்வான்.

- இடைமருதூர் கி. மஞ்சுளா

10.10.2017

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!