கண்ணம்மா... கண்ணம்மாவில் ஜொலிக்கும் ஜோதி

இன்று தினமணி - மகளிர் மணியில் வெளியான சிறு தகவல் இது. அவசியம் இந்தச் சிறுமி பாடிய அப்பாடலை ஒருமுறையாவது கேளுங்கள்.




மகளிர் மணி....22.3.2017
ஜொலிக்கும் ஜோதி!

÷ஒரு திரைப்படப் பாடல் பிரபலமடைய வேண்டும் என்றால், அப்பாடலுக்குச் சில தகுதிகள் இருக்க வேண்டும். ஒன்று அப்பாடலை இயற்றிய பாடலாசிரியரின் மொழி நடை, அடுத்து அப்பாடலுக்கு இசையமைத்த இசையப்பாளரின் கைவரிசை, இதற்கெல்லாம் மேலாக அப்பாடலைப் பாடியவரின் குரல். ஆனால், திரைப்படத்தில் அப்பாடலை அதிகம் கவனிக்காதவர்கள் கூட தற்போது பார்வையிழந்த மாற்றுத்திறனாளியான ஜோதி என்ற பெண் அதே பாடலைப் பாடி பலரையும் கவனிக்க வைத்துவிட்டார். அவர் பாடிய அப்பாடல் வலைதளங்கள் பலவற்றிலும் வைரலாகப் பரவி வருகிறது. "றெக்க' திரைப்படத்தில் வரும் ""கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை'' என்ற பாடல்தான் அது.
÷இவர் ஒருநாள் சர்ச்சில் பாடியபோது, அதை அனைவரும் பாராட்டியதோடு, அப்பாடலை வீடியோ எடுத்து  இணையதளத்தில் பதிவேற்றமும் செய்திருக்கிறார்கள்
÷யுகபாரதி எழுதி, டி.இமான் இசையமைக்க, பாடியவர் நந்தினி ஷ்ரிகர். ஆனாலும், இந்தப் பாடல் தற்போது ஜோதி பாடிய பின்புதான், அந்த வீடியோ பதிவு முகநூல், கட்செவி அஞ்சல், ட்விட்டர் முதலிய வலைதளங்களில் வைரலாகப் பரவி சூப்பர் ஹிட்டாகி வருகிறது




÷சென்னையைச் சேர்ந்த 16 வயது ஜோதி, சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். படிக்கப் பிடிக்காமல் தாய் மற்றும் பாட்டி தாத்தாவின் துணையோடு 13ஆவது வயதில் அடையாறு இசைக் கல்லூரியில் சேர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக இசைக்கல்வி பயின்று வருகிறார்.
÷அந்த வீடியோ பதிவைப் பார்த்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தன் அடுத்த படமான "அடங்காதே' திரைப்படத்தில் ஜோதிக்குப் பாட வாய்ப்பளிக்கப் போவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். சாதிப்பதற்கு உடற்குறை ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் ஜோதி. "குக்கூ' திரைப்படத்தில் ஒரு பாடலைப் பாடிப் பிரபலமான, பார்வையிழந்த பெண் வைக்கம் விஜயலட்சுமியைப் போலவே ஜோதியும் வெகு விரைவில் திரைத்துறையில் ஜொலிக்க வேண்டும் என்பதே பலருடைய விருப்பம்.




-இடைமருதூர் கி. மஞ்சுளா

Comments

Popular posts from this blog

தாவர உணவு தத்துவமும் வாழ்வியலும்

மன அமைதி வேண்டுமா....

இருட்டடிப்பு செய்யப்பட்ட இதிகாச மகா ரகசியம்!